ஆரோக்கிய சேது "ஆப்"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்!
டெல்லி: ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியது யார்? எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்த பதில் கை கழுவி ஓடுவதற்கு சமம் என்று, மத்திய தகவல் ஆணையம் விளாசியுள்ளது.
கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்கு ஆரோக்ய சேது செயலி உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அனைவரது செல்போன்களிலும் இதை டவுன்லோட் செய்து கொண்டு ப்ளூடூத் ஆன் செய்து வைத்துக்கொண்டால், அருகாமையில் உள்ள கொரோனா நோயாளிகள் பற்றிய தகவல் கிடைத்து, அவர்களிடம் இருந்து விலகி இருக்கமுடியும் என்று கூறப்பட்டது.
அதேநேரம், ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றது. உங்களின் சொந்த தகவல்கள் திருடப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பல மாதங்கள் முன்பே எச்சரிக்கை விடுத்தார். அப்போது இவரது எச்சரிக்கை, தேசத்துக்கு எதிரானது என்று பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம்
ஆனால் இப்போது ஆரோக்கிய சேது ஆப் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த செயலியை யார் உருவாக்கினார்கள் என்பது பற்றிய தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சவுரவ் தாஸ் என்பவர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் இந்த செயலியை வடிவமைத்தது யார் என்பது குறித்த விவரம் தங்களுக்கு தெரியாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், தேசிய தகவல் மையம் பதிலளித்தது.
அதிர்ச்சி விளக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட மத்திய தகவல் ஆணையர் வனஜா இதற்கு விளக்கம் அளிக்குமாறு தேசிய தகவல் மையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
கை கழுவி தப்ப முடியாது
மீஇட், துணை இயக்குநர்கள் எஸ்.கே. தியாகி மற்றும் டி.கே.சாகர், தேசிய மின்-ஆளுமை பிரிவு மூத்த பொது மேலாளர் ஆர்.ஏ.தவன் மற்றும் சிபிஐஓ என்ஐசி ஸ்வரூப் தத்தா ஆகிய நான்கு அதிகாரிகளுக்கு தகவல் ஆணையர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வெளியிட்டார். அதில் "தங்களிடம் தகவல் இல்லை என்று கூறி நீங்கள் கைகளை கழுவ முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தேடப்படும் தகவல்களை கண்டுபிடிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். "என்று அதில் கூறப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதை விளக்க ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கோப்புகள் எங்கே
மேலும், அதிகாரிகள் யாருமே செயலியை உருவாக்கியது யார், அதைப் பற்றிய கோப்புகள் எங்கே என்று எதைப் பற்றியும் எதையும் விளக்க முடியவில்லை என்பது ரொம்ப மோசமானது. இந்த செயலியை உருவாக்கும்போது கோப்புகள் பரிமாற்றம் செய்யப்படவில்லையா. அப்படி நடக்க சாத்தியமே இல்லை. இதைக் கண்டுபிடிக்க ஒரு குடிமகன் சுற்றி சுற்றி ஓட முடியாது. இவ்வாறு தனது நோட்டீசில் விளாசியுள்ளார் மத்திய தகவல் ஆணையர்.
மத்திய அரசு விளக்கம்
இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இப்போது ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் 21 நாட்களில் ஆரோக்ய சேது செயலி உருவாக்கப்பட்டது. இது ஒரு சாதனை. கொரோனா நோயை தடுப்பதற்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கிறது. இந்த செயலி மிக வெளிப்படையான முறையில் உருவாக்கப்பட்டது. தனியார் மற்றும் அரசு இணைந்து உருவாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலியை இதுவரை 16 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கிறது. ஆரோக்ய சேது பற்றி எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.