உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்... உலக சுகாதார அமைப்பு வாழ்த்து
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் மனிஷ்குமார் முதல் தடுப்பூசியைப் பெற்றார்.
இந்தியாவில் முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
"ஒருவேளை ஏதாவது பாதக விளைவு ஏற்பட்டால்.." கோவேக்சின் தடுப்பூசி போடும் முன்பு கேட்கப்படும் ஒப்புதல்!
இந்தியா முழுவதும் உள்ள 3,006 தடுப்பூசி மையங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் சுமார் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் கோ-வின் செயலியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்து கொண்டவர்களுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த கோ-வின் செயலி விரைவில் வெளியடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது