கொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போதும் கைவிட்டுவிட வேண்டாம் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா பரவலின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவதாக எண்ணி அதன் தடுப்பு பணிகளில் அஜாக்கிரதை வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனாவை முழுமையாக இன்னும் முறியடிக்காத நிலையில் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தொற்று குறைவதாக கருதி கவனக்குறைவாக செயல்பட வேண்டாம் எனவும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கொல்கத்தாவில் அளித்த பேட்டியில், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியிருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல், கொரோனா விழிப்புணர்வு உள்ளிட்டவைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் இதற்காக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.