ஆமா.. யாரு சவுக்கிதார்..? உச்சநீதிமன்றம் பளிச் கேள்வி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, 'யார் சவுக்கிதார்' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ரபேல் விவகாரத்தில், பிரதமரை திருடன் என்று பொருள்படும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கு ரபேல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்று அவர் மேற்கோள் காட்டி தேர்தல் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரா? நாளை விளக்கம் அளிக்க வழக்கறிஞருக்கு உத்தரவு!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் உச்சநீதிமன்றம் அதுபோன்று எந்த வார்த்தையும் சொல்லாத நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்ற மாண்பை குலைப்பதாகவும், பிரதமருக்கு களங்கம் கற்பிப்பதாகவும், பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
இன்று வழக்கு விசாரணை வந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு புகாரை ரத்து செய்ய ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கைவிடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
ராகுல் காந்தி வருத்தம்
வாதத்தின்போது அபிஷேக் சிங்வி கூறுகையில், ராகுல் காந்தி ஏற்கனவே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன், தனது அரசியல், குற்றச்சாட்டையும், சேர்த்து அவர் கூறியிருந்தார். எனவேதான் 'சவுக்கிதார் சோர் ஹே' என கூறியிருந்தார். அதேநேரம், உச்சநீதிமன்றம், ரபேல் விஷயத்தில் தவறே இல்லை என தீர்ப்பு வழங்கிவிட்டதாக, பிரதமர் நரேந்திர மோடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார், என்றார்.
சவுக்கிதார் யார்
அப்போது, 'யார் சவுக்கிதார்' என்ற கேள்வியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எழுப்பினார். சவுக்கிதார் என்றால் காவலாளி என பொருள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் தங்களை தேசத்தின் சவுக்கிதார்கள் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ரஞ்சன் கோகாயுடன், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கன்னா ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.