27 வயதில் மேயர்.. 44 வயதில் முதல்வர்.. இளம் வயதில் சாதனைகளை புரிந்த தேவேந்திர பட்னவீஸ்.. யார் இவர்?
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரத்தில் பாஜகவின் முதல் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக என்சிபி- பாஜக கூட்டணி உருவாகி தற்போது தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றார்.
பட்னவீஸ் மாநிலத்தில் பாஜகவின் முதல் முதல்வராக அறியப்படுகிறார். அதிலும் அவர் இளம் முதல்வர்களில் இரண்டாவது நபர் ஆவார். நாக்பூர் மாவட்டத்தில் 1970-இல் ஜூலை 22-ஆம் தேதி பிறந்தவர் பட்னவீஸ். இவரது தந்தை கங்காதர் பட்னவீஸ் நாக்பூரில் இருந்து மகாராஷ்டிரத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி பதவியேற்ற வேகத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!
போராட்டம்
அவசரகாலத்துக்கு பிறகு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இயங்கி வந்த பள்ளியில் தேவேந்திர பட்னவீஸ் படித்து வந்தார். இந்த நிலையில் ஜனசங்கத்தில் உறுப்பினராக இருந்த கங்காதர் பட்னவீஸ் , அப்போதைய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
சட்டப்படிப்பு
இதைத் தொடர்ந்து கங்காதர பட்னவீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் இந்திரா என்ற பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன் என கூறிய தேவேந்திர பட்னவீஸ் திடீரென வேறு பள்ளியில் இணைந்தார். நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 1992-ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்தார்.
பாஜகவில் இணைந்தார்
தந்தை ஜனசங்கத்தில் பணியாற்றியது போல் 1990-களில் தேவேந்திர பட்னவீஸ் பாஜகவில் இணைந்தார். பாஜக மாணவரணி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ராம்நகர் வார்ட்டில் நடந்த மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றார்.
இரண்டாவது மேயர்
5 ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினராக இருந்த பட்னவீஸ், நாக்பூர் மாநகராட்சியின் இளம் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் இளம் வயது மேயர்களில் இரண்டாவது மேயர் என்ற பெருமையை பெற்றார்.
முதல் முறையாக முதல்வர்
1999-ஆம் ஆண்டு நாக்பூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். அன்று முதல் 2019-இல் நடந்த சட்டசபை தேர்தல் வரை நாக்பூர் எம்எல்ஏவாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-இல் நடந்த சட்டசபை தேர்தலில் தேவேந்திர பட்னவீஸ் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
சர்ச்சை பேச்சு
இதன் மூலம் முதல்முறையாக பாஜக நேரடியாக ஆட்சியை பிடித்தது. அது போல் அதே ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு நாசிக்கில் நடந்த பேரணியில் ஒவ்வொரு இந்தியரும் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட வேண்டும். அப்படி முழக்கமிடாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர்கள். எனவே பாகிஸ்தான் அல்லது சீனாவுக்கு செல்லுங்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
பட்னவீஸ் மீண்டும் முதல்வர்
இந்த நிலையில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பட்னவீஸ் தற்போது 49 வயதில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு அம்ருதா பட்னவீஸ் என்ற மனைவியும் திவிஜா பட்னவீஸ் என்ற மகளும் உள்ளனர்.