பாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக, எஸ்.ஏ.போப்டே பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
ரஞ்சன் கோகாய் இவ்வாறு நீதிபதி எஸ்ஏ போப்டே பெயரை, மத்திய அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 46வது தலைமை நீதிபதியாக பதவிக்கு வந்தவர் ரஞ்சன் கோகாய். வரும் 17ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் நீதிபதி போப்டே, உச்சநீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக நவம்பர் 18-ம் தேதி பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்
சட்ட பின்னணி
இருப்பினும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஷரத் அரவிந்த் போப்டே என்பதுதான் எஸ்.ஏ.போப்டே பெயரின் விரிவாக்கம் ஆகும். 1956ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தார். போப்டே நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா வழக்கறிஞராக இருந்தார். போப்டேவின் தந்தை அரவிந்த் போப்டே 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக உயர் பதவி வகித்தவர்.
கல்லூரி படிப்பு
போப்டேவின் மூத்த சகோதரர் மறைந்த வினோத் அரவிந்த் போப்டே உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், அரசியலமைப்பு நிபுணராகவும் இருந்தார். போப்டே தனது பட்டப்படிப்பை நாக்பூரில் எஸ்.எஃப்.எஸ் கல்லூரியில் படித்தார். 1978ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவர் 1978 செப்டம்பர் 13ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
மூத்த வழக்கறிஞர்
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தவர். 1998ல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்த்தை பெற்றார். போப்டே 2000 29 மார்ச் அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தலைமை நீதிபதி
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2012 அக்டோபர் 16ல் பணியமர்த்தப்பட்டார். 2013 ஏப்ரல் 12ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2021 ஏப்ரல் 23ம் தேதி போப்டே ஓய்வு பெறுவார்.