பாஜகவின் பரம வைரி- மாஜி உ.பி. முதல்வர்- ஜனாதிபதி வாய்ப்பை தவறவிட்டவர்.. யார் இந்த முலாயம்சிங் ?
டெல்லி: நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் போர்க்குரலாக விளங்கியவருமான முலாயம்சிங் யாதவ் உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1960-ம் ஆண்டுகளில் வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக வீசிய பேரலைகளாக ராம் மனோகர் லோகியா, ஜெய்பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண் உள்ளிட்டோர் இளைஞர் செல்வாக்குடன் வலம் வந்தனர். இந்த இளைஞர் பட்டாளத்தில் லோகியா, ராஜ்நாராயணின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் முலாயம்சிங் யாதவ்.
யோகிக்கு வெற்றித் திலகமிட்ட முலாயம்சிங் பேத்தி - பாஜக வெற்றியைக் கொண்டாடிய யாதவ் குடும்பம்!
தேர்தல் அரசியல் களம்
1967-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார் முலாயம்சிங் யாதவ். இதுதான் அவரது முதலாவது தேர்தல் அரசியல் களம். முதல் களத்திலேயே வெற்றியை அறுவடை செய்து எம்.எல்.ஏ.வானார் முலாயம்சிங். 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், அவசரநிலையை பிரகடனம் செய்தார். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் முலாயம்சிங் யாதவும் ஒருவர். இந்திராவின் எமர்ஜென்சி எனப்படும் மிசா சிறைவாசத்தை 19 மாதங்கள் அனுபவித்தார் முலாயம்சிங்.
ஜனதா பாதை
1977-ம் ஆண்டு அமைச்சரானார் முலாயம்சிங்.. 1980களில் ஜனதா கட்சி, சிதறுண்டு போக தொடங்கிய காலத்திய லோக் தள் கட்சித் தலைவரானார். இது பின்னாளில் ஜனதா தள் ஆக உருமாறியது. லோக் தள் கட்சி பிளவுபட்ட போது தனிக்கட்சியாக கிரந்திகாரி மோர்ச்சாவை உருவாக்கினார் முலாயம். 1980களின் இறுதியில் 1989-ல் காங்கிரஸ் ஆதரவுடன் உ.பி. முதல்வரானார். ஆனால் 2 ஆண்டுகள்தான் இந்த ஆட்சி நீடித்தது. அப்போது சந்திரசேகரின் ஜனதா தளத்தில் இருந்தார் முலாயம்.
சமாஜ்வாதி கட்சி
1992-ம் ஆண்டு முலாயம்சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். 1993-ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கை கோர்த்தார். இதனால் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டினர் இரு பெரும் தலைவர்கள். ஆனால் பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் இணைந்தது முரண்பாடுதான்.
ஜனாதிபதி பதவி?
உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை, நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். லோக்சபா எம்.பி.யாக நீண்டகாலம் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பிரணாப் முகர்ஜிக்கு அடுத்ததாக முலாயம்சிங் யாதவ் ஜனாதிபதியாவார் என ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. ஆனால் அப்படி நடக்கவில்லை.
நேதாஜி முலாயம்
முலாயம்சிங் ஆக்டிவ்வாக இருந்த போதே மகன் அகிலேஷ் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்து மாநில முதல்வராக்கினார். பின்னர் மகனுடன் முரண்பட்டு ஓரம்கட்டப்பட்டுவிட்டார் முலாயம்சிங். பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் பாஜகவுக்கு எதிரான முன்வரிசை தளபதியாக நின்ற முலாயம்சிங் யாதவ், அவரது ஆதரவாளர்களால் நேதாஜி என தீரமுடன் போற்றப்படுகிறவர்.