கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா!
டெல்லி: 17ஆவது மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லா 3 முறை எம்எல்ஏவாகவும் 2 முறை எம்பியாகவும் இருந்தவர்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சபாநாயகராக ஓம் பிர்லாவின் பெயரை பாஜக முன்மொழிந்தது. இதையடுத்து ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து போட்டியின்றி பிர்லா தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த ஓம் பிர்லாவுக்கு 57 வயதாகிறது. இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு கோட்டா தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் சாந்தி தாரிவாலை 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அது போல் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் 24,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்
கடந்த 2013-ஆம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியின் பங்கஜ் மேத்தாவை எதிர்த்து போட்டியிட்ட பிர்லா 3-ஆவது முறையாக எம்எல்ஏ பதவி பெற்றார். இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு கோட்டா பந்தி எம்பி தொகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அதே தொகுதியில் தற்போது நடைபெற்ற லோக்சபா தொகுதி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 17ஆவது மக்களவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்து கட்சியினரிடமும் எந்தவித பாகுபாடும் இன்றி எளிமையாக பழகக் கூடியவர் என்பது ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து தெரிகிறது.