முடிவு வராமல் விட மாட்டார்.. பார்த்தசாரதியை வைத்து ப.சிதம்பரத்தை தூக்கிய சிபிஐ!
Recommended Video
டெல்லி: நள்ளிரவை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த புதன்கிழமை இரவு நேரம் அது. திடீரென இரண்டு சிபிஐ டீம்கள் டெல்லியில், சிதம்பரம் வீட்டு சுற்றுச் சுவரைக் தாண்டி குதித்து விரைவாக உள்ளே நுழைந்தன. இதில் ஒருவர் பார்த்தசாரதி என்ற அதிகாரி. இவர்தான், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாகும். பார்த்தசாரதி முதலில் சுவர் ஏறி குதிக்க, மற்ற அதிகாரிகளும் அதையே செய்தனர்.
அங்கே குவிந்திருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்பாகவே அவர்கள் உள்ளே நுழைந்து சென்றனர். அரை மணி நேரம் கழித்து சிதம்பரத்தோடுதான் வெளியே வந்தார் பார்த்தசாரதி. இதையடுத்து சிபிஐ தலைமையகத்திற்கு சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசின் முன்னாள் மூத்த அமைச்சர் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஐஎன்எக்ஸ் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது. அப்போது முதல் பார்த்தசாரதி பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார்.
இருவரும் கைது
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட, ஒரு வருடம் கழித்து, 2018ம் ஆண்டு, ஏப்ரலில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தது. அப்போதும் விசாரணை அதிகாரி பார்த்தசாரதிதான். இப்போது சிதம்பரம் கைது செய்யப்படும்போதும் பார்த்தசாரதிதான் விசாரணை அதிகாரி.
உறுதியானவர்
சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருப்பவர் பார்த்தசாரதி. சிபிஐயில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் பலருமே பார்த்தசாரதியை ஒரு "அமைதியான, உறுதியான அதிகாரி" என்றும், "ஐ.என்.எக்ஸ் வழக்கை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு வந்து சேர்க்கக்கூடியவர்" என்றும் நினைவு கூர்கிறார்கள்.
அமித் ஷா கைது
2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது குஜராத் போலி எண்கவுண்ட்டர் வழக்கில்அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இன்று அதே அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சசரான சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தசாமி, பார்த்தசாரதி
அமித்ஷா கைது செய்யப்பட்டபோது சிபிஐ ஐஜியாக இருந்தவர் கந்தசாமி. விசாரணை அதிகாரி அவரே. இப்போது, சிதம்பரம் கைது செய்யப்படும்போது சிபிஐ விசாரணை அதிகாரி பார்த்தசாரதி. ஆக மொத்தம், முருகனும், பெருமாளும், அமித்ஷா, சிதம்பரம் கைது சம்பவங்களில் விளையாடிவிட்டார்கள் என்று கிசுகிசுக்கிறார்கள் டெல்லி மூத்த பத்திரிக்கையாளர்கள்.