பிசிசிஐ பிரச்சினையை தீர்த்ததில் கேப்டன்., அயோத்தி சமரச குழு தலைவர்.. யார் இந்த இப்ராஹிம் கலிஃபுல்லா?
Recommended Video
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில், மத்தியஸ்தம் ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்தால், அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான இப்ராஹிம் கலிஃபுல்லா, மிகுந்த விஷய ஞானம் கொண்டவர் என புகழப்படுபவர்.
பிசிசிஐ விவகாரத்தில், இவரது செயல்பாடு, கிரிக்கெட் அணியின் கேப்டனை போல இருந்தது என்று, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாலே புகழப்பெற்றவர்தான் இப்ராஹிம் கலிஃபுல்லா.
2012ம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர் இப்ராஹிம் கலிஃபுல்லா. இவரது பூர்வீகம் தமிழகத்தின் காரைக்குடி என்பது சிறப்பு.
இவர்கள்தான் தீர்த்து வைக்க போகிறார்கள்.. அயோத்தி பிரச்சனை.. தீர்வாக அமைய போகும் தமிழர்கள்!
உச்சநீதிமன்ற நீதிபதி
2016ம் ஆண்டு ஜூலை மாதம், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார், இப்ராஹிம் கலிஃபுல்லா. பிசிசிஐ செயல்பாடு தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தபோது, அதன் செயல்பாடுகளில் மாற்றங்கள், மேலாண்மை முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதியாகும். அந்த அமர்வுக்கு, அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமை வகித்தார்.
முன்னாள் கேப்டன்
இப்ராஹிம் கலிஃபுல்லாவின் பிரிவு உபசார விழாவில், அந்த வழக்கு தொடர்பாக டி.எஸ்.தாக்கூர் நினைவு கூர்ந்து பேசியதை யாராலும் மறக்க முடியாது. அவர் பேசிய வார்த்தைகளில் இருந்து, "பிசிசிஐ விவகாரம் தொடர்பாக, முடிவெடுக்கும்போது, நான், நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா அருகே அமர்ந்திருப்பதை போல உணரவில்லை. ஏதோ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஒருவரிடம் அமர்ந்திருப்பதை போல உணர்ந்தேன். அந்த அளவுக்கு விவரங்களை வழங்கினார், இப்ராஹிம் கலிஃபுல்லா.
சென்னை டூ காஷ்மீர்
கிரிக்கெட் தனது, இழந்த கவுரவத்தை மீட்பதில், இப்ராஹிம் கலிஃபுல்லா எனக்கு மிகுந்த உதவிகரமாக இருந்தார். இவ்வாறு புகழாரம் சூட்டினார் தாக்கூர். அது மட்டுமா, தாக்கூரின் புகழுரையின் பிற பகுதியையும் பாருங்கள். நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு பணியாற்ற சென்றவர் இப்ராஹிம் கலிஃபுல்லா. சென்னையிலிருந்து காஷ்மீருக்கு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். காஷ்மீருக்கு மிகுந்த கஷ்டமான காலச் சூழலில், இப்ராஹிம் கலிஃபுல்லா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், மாநில ஓருமைப்பாட்டில் இவரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இப்ராஹிம் கலிஃபுல்லா வாழ்க்கை வரலாறு
ஓய்வு பெற்ற நீதிபதி, இப்ராஹிம் கலிஃபுல்லாவின் தந்தை பக்கீர் முகமது. 1951ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்த இப்ராஹிம் கலிஃபுல்லா, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். தொழிலாளர் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த இப்ராஹிம் கலிஃபுல்லா, டி.எஸ்.கோபாலன் அன்டு கோ என்ற நிறுவனத்தில், சேர்ந்து, பல்வேறு பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட்டஉள்ளார். 2000மாவது ஆண்டு மார்ச் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீண்ட அனுபவம்
2011ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, இப்ராஹிம் கலிஃபுல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்ற பிறகு, 2012 ஏப்ரல் 2ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.