பாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்? ராகுல் பொளேர்
டெல்லி: பாலக்கோடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பிரதமர் உட்பட 5 பேருக்கு மட்டும்தான் தெரியும், அந்த விஷயம் முன்கூட்டியே ரிபப்ளிக் டிவி சேனல் எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பதிலடியாக பாகிஸ்தானுக்குள் பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து சென்று தாக்கி தீவிரவாத முகாம்களை அழித்து ஒழித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்கள் முன்பு இத்தனை நிகழ்வுகளும் நடந்தேறின.
வாட்ஸ்அப் லீக்
இந்தியா காட்டிய அதிரடி தாக்குதல், மத்திய பாஜக அரசு, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு வகையில் உதவி செய்ததாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில்தான், ரிபப்ளிக் டிவி சேனல் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, பார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் உடன், வாட்ஸ்அப் உரையாடலில், பாலக்கோடு தாக்குதல் பற்றி பேசி இருக்கக் கூடிய தகவல்கள் சமீபத்தில் கசிந்தன.
பாஜக வெற்றிக்கு உதவியதாம்
அந்த உரையாடலில், புல்வாமா தாக்குதல் நமக்கு நல்லது என்று அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் என்றும், அதன் மூலம் மறுபடியும் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தாக்குதல் பெரியதாக இருக்கும் என்றும் அர்னாப் கோஸ்வாமி தனது வாட்ஸ்அப் உரையாடலில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 பேருக்குத்தானே தெரியும்
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள், எப்படி ஒரு பத்திரிகையாளருக்கு முன்கூட்டியே தெரிய வந்தது என்ற அதிர்வலைகளை இந்த வாட்ஸப் உரையாடல் எழுப்பியது. இந்த நிலையில் முதல் முறையாக, ராகுல்காந்தி இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதை பாருங்கள்: மத்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள ஐந்து பேருக்கு மட்டும்தான் பாலக்கோடு தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியும் (பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய விமானப்படை தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்). இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்கக்கூடும். இது ஒரு குற்றச் செயலாகும்.
பைலட்டுகளுக்கே தெரியாதே
ராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விமானப் படையைச் சேர்ந்த பைலட்டுகள் கூட கடைசி நேரத்தில்தான் இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்திருப்பார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாளர் முன்கூட்டியே அதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது.
தேசப்பற்று இதுவா?
புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இறந்ததை, நல்லதுக்கு தான் என்று அர்னாப் கோஸ்வாமி கூறிய வார்த்தை சரியானது கிடையாது. பிரதமரின் சிந்தனையை போலவே அர்ணாப் சிந்தனை இருப்பதை இது காட்டுகிறது. தேர்தல் வெற்றி மட்டும்தான் அவர்கள் கண்களுக்கு தெரிந்து இருக்கிறது. இந்த அரசில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை தாங்களே தேசப் பற்று கொண்டவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறார்கள். ஆனால், நமது அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியே கசிய விட்டுள்ளது தேசப் பற்று கொண்டவர்கள் செய்யும் விஷயம் கிடையாது.
பாகிஸ்தானுக்கும் தெரிந்திருக்கும்
அர்னாப் கோஸ்வாமி இந்த விஷயத்தை தெரிந்து வைத்துள்ளார் என்றால், கண்டிப்பாக பாகிஸ்தானும் முதலிலேயே இதைத் தெரிந்து இருக்கும் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுவரை அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் லீக் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் என்ற கருத்தைத் தொடர்ந்து பாஜக தரப்பில் இருந்து பதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.