லடாக்கை சீனாவுக்கு சொந்தமாக்கி வரைபடம்.. ஹு வெளியிட்ட தவறான மேப்பால் பரபரப்பு
டெல்லி: இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கின் ஒரு பகுதியை சீனாவுக்கு சொந்தமானது என உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் தவறான வரைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவை தொற்று நோய் என அறிவித்ததில் தாமதம் காட்டியதாக உலக சுகாதார அமைப்பின் மீது குற்றச்சாட்டு உள்ளது. அது போல் இந்த விவகாரத்தில் சீனாவுக்கே ஹு சாதகமாக நடந்து கொள்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இந்தியாவிடம் தற்போது வாலாட்டியுள்ளது ஹூ அமைப்பின் சீனப் பிரிவு. லடாக்கின் ஒரு பகுதியான அக்ஷாய் சின் பகுதியை 1962 ஆம் ஆண்டு இந்திய- சீன போருக்கு பின்னர் ஆக்கிரமித்துக் கொண்டது சீனா. இந்தப் பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது.
இணையதளம்
இந்த நிலையில் இந்த பகுதி சீனாவுக்கு சொந்தமானது என கூறி தனது இணையதளத்தில் தவறான வரைப்படத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி புள்ளி வைத்த கோடால் தனி வண்ணம் கொடுத்து காண்பிக்கப்பட்டுள்ளது. ஹூ அமைப்பின் சீனப் பிரிவு இணையதளம்தான் இப்படி தவறான மேப்பை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்
லடாக் மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் பல வண்ணங்களில் காணப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை புள்ளி வைத்த கோடுகளால் அடையாளம் காட்டிய ஹு, இதை பிரச்சினைக்குரிய பகுதியாக குறிப்பிட்டுள்ளது.
வேறு நிறங்கள்
காஷ்மீரின் பல பகுதிகளில் பிரச்சினைக்குரிய பகுதிகள் என பல்வேறு ஐநா வரைப்படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவின் நிறத்துடன் இணைக்காமல் வெவ்வேறு நிறங்களில் ஹு காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரைப்படம்
இதுகுறித்து சீனா, பாகிஸ்தான், பூடானுக்கான முன்னாள் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே கூறுகையில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டாமல் இருப்பதன் மூலம் ஹு சித்தரித்த இந்தியாவின் வரைப்படம் ஐநாவின் வரைப்படத்திலிருந்து மாறுபடுகிறது. இது புதிதாகவும் தவறாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபோல் தவறான வரைப்படத்தை சித்தரித்த ஹு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த பிரச்சினையை இந்திய அரசு ஐநாவில் எழுப்பும் என தெரிகிறது.