இந்தியாவில் மிக வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகலாம்.. புதிய வார்னிங்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க உருமாறிய வைரசும், கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காததும் தான் காரணம் எனக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன், உருமாறிய கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை காரணமாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது- சொல்வது உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங்
தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 4,000ஐ தாண்டியது. வரும் வாரங்களில் கொரோனா 2ஆம் அலை மேலும் மோசமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப் பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.
உருமாறிய கொரோனா வகை
இவை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், இந்தியாவில் நாம் இப்போது மிக வேகமாகப் பரவும் கொரோனா வகைகளில் ஒன்றைத்தான் காண்கிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் B.1.617 வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இங்கு கொரோனா பரவல் அதிகரிக்கப் பல காரணங்கள் உள்ளன. வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா வகையும் அவற்றில் முதன்மை காரணமாகும் என்றார்.
உலக நாடுகள் கருத்து
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் இந்த B.1.617 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை எனப் பட்டியலிட்டுள்ளது. இருப்பினும் தற்போது இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கும் கொரோனா வகை எனப் பட்டியலிடவில்லை. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் B.1.617 வகையை கவலையளிக்கும் கொரோனா வகை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சீனாவில் 2019இல் பரவ தொடங்கிய கொரோனாவை விட அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கும் வகை எனப் பட்டியலிடும்.
வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம்
தொடர்ந்து இந்தப் புதிய கொரோனா வகை பற்றிப் பேசிய சௌமியா சுவாமிநாதன், "இந்த புதிய B 1.617 கவலையளிக்கும் ஒரு வைரசாக மாறலாம். ஏனெனில் இது வேறு சில பிறழ்வுகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி அல்லது இயற்கையாக உடலில் உருவாகும் ஆன்ட்டிபாடிகளை எதிர்க்கும் திறனை இது கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் கொரோனா அதிகரிக்க இந்த உருமாறிய வைரஸ் மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது.
கொரோனா வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறினர். மிகப் பெரிய கூட்டங்களை நடத்தினர். கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதி, இந்தியர்கள் பலரும், மாஸ்க் அணிவதைத் தவிர்க்கத் தொடங்கினர். கொரோனா மீண்டும் அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்தது. சரியான நடைமுறைகளைப் பின்பற்றினால், கொரோனா பரவல் வேகத்தைக் குறைக்க முடியும். கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, இந்தியாவிலேயே பல மாதங்கள் கொரோனா பரவலின் வேகம் குறைந்தே இருந்தது.
இப்போது கஷ்டம்
தொடக்கக் காலத்தில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தவறவிட்டோம். இப்போது வைரஸ் பரவல் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் இதைச் சமாளிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் இது ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான மக்களிடம் பரவி விட்டது. மிக வேகமாகப் பரவி வருவதால் தற்போது இதைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் கடினம்.
தடுப்பூசி பணிகள்
130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் தற்போது நாம் சுமார் 2% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளோம். இந்திய மக்கள்தொகையில் 70-80% மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தப் பல மாதங்கள் வரை ஆகலாம். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வைரஸ் பரவலை முடிந்த வரை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
கட்டுப்படாமல் போகலாம்
வைரஸ் வேகமாகப் பரவ பரவ, அது உருமாறிக் கொண்டே இருக்கும். புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அப்படித் தோன்றும் உருமாறிய கொரோனா வகைகளில் சில வகை கொரோனா தற்போது நம்மிடம் இருக்கும் தடுப்பூசிக்குக் கட்டுப்படாமல் போகும் சூழ்நிலை உருவாகலாம். அது மிகப் பெரிய ஒரு பிரச்சனையை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.