2009இல் தோன்றிய பன்றி காய்ச்சலே இன்னும் அழியவில்லை.. பிறகு கொரோனா எப்படி அழியும்.. பகீர் கிளப்பிய WHO
டெல்லி: 2009ஆம் ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சலே இன்னும் அழியாமல் மக்களிடையே பரவி வருவதால் கொரோனா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களிடையே தொடர்ந்து பரவும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.
உலகின் எந்த நாட்டிலும் கொரேனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகளில் வைரஸ் கட்டுக்குள் இருப்பதைப் போலத் தோன்றினாலும் உருமாறிய கொரோனா காரணமாக அடுத்த அலை ஏற்பட்டு விடுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது உலக வல்லரசு முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
எட்டிப்பார்த்து ஏக்கம் மூட்டும் பவானி ரெட்டி... உச்சி கொட்டும் ரசிகர்கள்
குறையும் கொரோனா
அதாவது சர்வதேச அளவில் சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு முதல்முறையாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு 62 ஆயிரம் வரை குறைந்துள்ளது குறிப்பாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு பெரியளவில் குறைந்துள்ளது. அதேபோல ஆப்பிரிக்க நாடுகளிலும் கொரேனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஈரான் துருக்கி ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாகார அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறார்களுக்கு வேக்சின்
மேலும், சிறார்கள் மற்றும் டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் வெறும் 0.5% மட்டுமே 24 வயதுக்குக் குறைவானவர்களால் ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை. குறிப்பாகச் சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், டீன் ஏஜ் வயதிற்குள் இருப்பவர்களுக்கு முதலில் வேக்சின் அளிப்பதைக் காட்டிலும் அதிக ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு அளிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
அழியாது
கொரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான் கூறுகையில், "கொரோனா வைரஸ் என்பது இனி நிச்சயம் நம்மைவிட்டுப் போகாது. 2009 காலகட்டத்தில் பரவிய பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இன்னும் நம்மிடையே தொடர்வது இதற்கு ஒரு சாட்சி. அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் அளிப்பதன் மூலம் Herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றலை நம்மால் அடைய முடியும். அதன் மூலம் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதியாவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். .
என்ன செய்யலாம்
கொரோனா பரவலைக் குறைப்பது மற்றும் விரைவாக வேக்சின் பணிகளை மேற்கொள்வது ஆகியவை மூலம் எளிதாக நம்மால் சமூக தடுப்பாற்றலை அடைய முடியும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையை நம்மால் குறைக்க முடியும். ஆனால், தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு என்பது இன்னும் கூட சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாகவே உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை" என அவர் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சல்
கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பன்றிக் காய்ச்சலை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அந்த சமயத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 2,84,500 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களைக் காட்டிலும் 15 மடங்கு அதிகமாகும். 2009இல் பன்றிக் காய்ச்சல் பரவ தொடங்கினாலும், சில மாதங்களிலேயே அது குறையத் தொடங்கியது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு 2010 ஆகஸ்ட் மாதம் பன்றிக் காய்ச்சலை உலக சுகாதார அமைப்பு என்டமிக் ஆக அறிவித்தது. இருப்பினும், தற்போதும் கூட அவ்வப்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.