லடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா!
Recommended Video
டெல்லி: லடாக் பிராந்தியமானது காலந்தோறும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிக்கிறது சீனா.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 ஆக பிரித்து சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக்கியிருக்கிறது மத்திய அரசு. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
லடாக்கில்சில பகுதிகளை சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பால்டிஸ்தான், சீனாவின் அக்சாய் சின் ஆகியவை லடாக்குடன் இணந்திருந்த பகுதிகள்தான்.
1962 யுத்தம்
1962-ம் ஆண்டு அக்சாய் சின் பகுதிக்காக இந்தியா- சீனா இடையே யுத்தம் நடைபெற்றது. பின்னர் இருநாடுகளுமே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து நடக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தனி யூனியன் பிரதேசம்
ஆனால் ஒட்டுமொத்த லடாக் பகுதியையுமே சீனா தம்முடையது என்றே கூறி வருகிறது. லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கருத்து தெரிவித்த சீனாவின் ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதி ஜங் ஜுன், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநாவின் வரையறைக்குட்பட்டு அமைதிப் பேச்சுகள் மூலம் தீர்வு காண வேண்டும். இந்திய அரசின் நிலைப்பாட்டால் காஷ்மீரின் நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இறையாண்மை விவகாரங்களையே இந்தியா கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இது இந்தியா- சீனா உறவை பாதிக்கும் என கூறியிருந்தார்.
ஒப்பந்தம் ஒபோட மறுப்பு
அதாவது லடாக் பிராந்தியத்தின் மீது தங்களுக்கும் உரிமை இருக்கிறது என்கிறது சீனா. இப்படியான ஒரு சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு குறித்து எந்த ஒரு முடிவுக்கும் வராமல் காலந்தோறும் இழுத்துக் கொண்டே இருக்கிறது சீனா என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். 1954-ம் ஆண்டு லடாக் சர்ச்சை தொடர்பாக 3 மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. லடாக் வழியாக இந்தியா- திபெத் இடையேயான பழமையான டெம்சோக் வர்த்தக பாதையை திறப்பது பற்றி இப்பேச்சுவார்த்தை இருந்தது. இந்திய பிரதிநிதி ராகவன் மற்றும் சீனாவின் ஜங் ஹன்ஃபூ தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பு பிரதிநிதிகளிடையே பல மணிநேரம் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்துக்கு சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அப்போது மூடப்பட்ட பழைய திபெத்துக்கான வர்த்தகப் பாதை இன்னமும் திறக்கப்படவும் இல்லை.
சீனாவின் எதிர்ப்பு
அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை அமைச்சராக இருந்த லடாக் தலைவர் குசோக் பகுலா ஒருமுறை திபெத் சென்றார். அதற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 2010-ம் ஆண்டு லடாக்கை உள்ளடக்கிய வடபோர்முனை தளபதி லெப். ஜெனரல் பிஎஸ் ஜஸ்வால் திபெத் செல்ல விசா தர மறுத்தது சீனா. இந்நிலையில் கடந்த ஆண்டு சீனாவுடன் 2 முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன.
சீனா நிராகரிப்பு
அதாவது லடாக்கின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகள், சிக்கிம் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றை இருதரப்பும் இணைந்து பார்வையிடுவதற்கு நமது ராணுவம் அழைப்பு விடுத்தது. சிக்கிம் எல்லைப் பகுதிகளை பார்வையிட ஒப்புக் கொண்ட சீனா, லடாக் விவகாரத்தை நிராகரித்தது. சீனாவைப் பொறுத்தவரையில் லடாக்கில் எப்போதும் பதற்றம் இருக்க வேண்டும்; அது எப்போதும் சர்ச்சைக்குரியதாக இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம் என்பதை அது வெளிப்படுத்தியது.
பாங்காங் ஏரி
இதை மீண்டும் உறுதி செய்யும் வகையில்தான் தற்போது பாங்காங் ஏரியில் ராணுவ வீரர்களை மிரட்டி மீண்டும் லடாக்கை சர்ச்சைக்குரிய நிலமாக்கியிருக்கிறது சீனா.