சத்தமின்றி நுழைந்த சீன உளவு கப்பல்.. இந்திய ஏவுகணையை உளவு பார்க்கும் மெகா பிளான்? பரபரப்பு
டெல்லி: இந்தியா இன்னும் சில நாட்களில் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்த உள்ள நிலையில், சீனா சத்தமில்லாமல் அதை உளவு பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன்று வருகிறது. இதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா அவ்வப்போது தனது உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது.
இலங்கை அரசு ஏற்கனவே சீனாவுக்குப் பல பில்லியன் டாலர் கடனை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது. இதனை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஸ்பீடாக பரவும் கொரோனா.. பதறும் ஜி ஜின்பிங்.. பதவியை ராஜினாமா செய்ய வெடித்த போராட்டம்.. பரபர சீனா
யுவான் வாங் 5
எனவே, இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சீனா இந்தப் பகுதிகளுக்குத் தனது உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படித்தான் சீனா யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை இலங்கைக்கு அனுப்பியது. இந்தக் கப்பலால் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்க முடியும். இந்தியா சரியாகத் தனது ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது இந்த கப்பலைச் சீனா அனுப்பியது. இந்திய ஏவுகணைகளின் ஆற்றலை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
மீண்டும் சீன உளவு கப்பல்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கூட அப்போது மனக்கசப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இப்போது மீண்டும் அதே யுவான் வாங் 5 கப்பல் மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த திங்கள்கிழமை இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்த நிலையில், இதை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அடுத்த வாரம் இந்தியா நீண்ட தூர ஏவுகணைகளைச் சோதிக்க உள்ள நிலையில், இது சர்ச்சையைக் கிளப்புவதாக உள்ளது.
இந்தியா சோதனை
20,000 டன் எடையுள்ள யுவான் வாங்-5 அதி நவீன சென்சார்கள், துல்லிய கண்காணிப்பு அமைப்புடன் சுமார் 400 பணியாளர்களைக் கொண்டதாகும். இந்தியா சமீபத்தில் தான் தனது ஏவுகணை சோதனைக்காகப் பெருங்கடல் பகுதிகளில் விமானங்கள் பறக்கக் கூடாது என்பதற்கான NOTAM அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சரியாக இந்தச் சூழலில் மீண்டும் யுவான் வாங் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளது. இந்திய ராணுவம் வரும் டிசம்பர் 15-16 தேதிகளில் ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணை சோதனை நடத்த உள்ளது.
அக்னி வி
நாட்டின் மிக வலிமையான ஏவுகணைகளில் ஒன்றான அக்னி-வி ஏவுகணையை இந்தியா அடுத்த வாரம் சோதனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. 5,000-கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த அக்னி-வி ஏவுகணை விரைவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட உள்ள நிலையில், சோதனை நடத்தப்படுகிறது. இந்த அக்னி வி மொத்தம் 3 நிலைகளைக் கொண்ட தாக்குதல் ஏவுகணையாகும். இதன் சோதனைகள் வெற்றிகரமானதாக இருந்தால், சீனாவின் வடக்குப் பகுதியையும் கூட இந்தியாவால் தாக்க முடியும். சீனா அச்சப்பட இதுவே முக்கிய காரணமாகும்.
இந்தியா முடிவு?
இப்போது சீன உளவு கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதால் அக்னி வி சோதனை சில நாட்களில் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த அக்னி 3 சோதனையும் கூட சீன உளவு கப்பலின் இருப்பு காரணமாக சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை சீன உளவு கப்பலின் இருப்பு காரணமாக அக்னி வி சோதனை மீண்டும் சில நாட்கள் தள்ளிவைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.
சாட்டிலைட் மூலம் கண்காணிப்பு
இந்திய பெருங்கடல் பகுதியில் உளவு பார்க்க வந்திருக்கும் இந்தக் கப்பலைத் திரும்பச் செல்லும்படி இந்தியாவால் கூற முடியாது. ஏனென்றால், சீன கப்பல் இப்போது சர்வதேச கடல் பகுதியில் உள்ளது. சர்வதேச கடல் பகுதியை எந்தவொரு நாடும் உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் சர்வதேச கடல் பகுதியில் பயணிக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமை உள்ளது. கப்பல் மட்டுமின்றி சாட்டிலைட் வழியாகவும் கூட இந்திய ஏவுகணைகளின் சோதனைகளைச் சீனா கண்காணித்து வருவதாகவும் இதற்காகவே பல செயற்கைக்கோள்களைச் சீனா வைத்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீனா
355 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உடன் உலகின் மிகப் பெரிய கடற்படைகளில் ஒன்றாகச் சீனா உள்ளது. சீனாவைத் தாண்டியும் கூட கம்போடியா, சீஷெல்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் சீன ராணுவத்திற்குத் தளங்கள் உள்ளன. அமெரிக்காவைப் போலவே உலகின் பல பகுதிகளிலும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் பகுதியில் வந்துள்ள சீன உளவு கப்பலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.