இது கொஞ்சம் விசித்திரமானது.. அதுதான் பெரிய சிக்கலே.. இந்தியா-சீனா இடையே எல்லையில் என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே லடாக் எல்லையில் தற்போது நடந்து வரும் மோதல் மற்றும் பிரச்சனை விசித்திரமானது என்று கூறுகிறார்கள். இப்போது நடக்கும் பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இந்த வருட தொடக்கத்தில் உறவு நன்றாகவே இருந்தது. சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூட தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு கடந்த வருடம் வந்துவிட்டு சென்றார். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு தற்போது அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இரண்டு நாடுகளும் எப்போது வேண்டுமானாலும் தீவிரமான போரில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு
என்ன சண்டை
இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் தற்போது நடக்கும் சண்டை மே 5ம் தேதிதான் தொடங்கியது. அதற்கு முன்பே சிறு சிறு அத்து மீறல் இருந்தது. ஆனாலும் வெளிப்படையாக பெரிய சண்டை வந்தது மே 5ம் தேதிதான். அப்போதுதான் லடாக் பகுதியில் இரண்டு நாட்டு படைகளும் மோதிக்கொண்டது. இரண்டு நாட்டு படைகளும் கற்களை தாக்கியும், ஆயுதங்களை எரிந்தும் மாறி மாறி தாக்கிக் கொண்டது. அதே நாள் சீனாவின் ஹெலிகாப்டர் ஒன்று லடாக் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சரியாகவில்லை
இந்த பிரச்சனை சரியாகிவிடும், எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அதன்பின் மீண்டும் தொடர்ந்து சண்டை வந்தது. மே 9ம் தேதி சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே சண்டை வந்தது. சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் இந்த சண்டை வந்துள்ளது. இதனால் அப்போதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
சண்டைக்கு காரணம்
5000 மீட்டர் உயரம் இருக்கும் மலை பகுதிக்கு அருகே உள்ள எல்லை பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. முதலில் வாய் தகராறாக இந்த சண்டை தொடங்கியது. அதன்பின் கற்கள் கொண்டு தாக்கிக் கொண்டு சண்டை செய்துள்ளனர். சில வீரர்கள் மட்டும் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போது லடாக் மற்றும் சிக்கிம் எல்லையில் இரண்டு நாட்டு படைகளும் குவிக்கப்பட காரணம்.
எல்லையில் படைகள் குவிப்பு
தற்போது இரண்டு நாட்டு எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. சீனா தனது படைகளை லடாக் எல்லையில் குவித்து வருகிறது. லடாக்கில் பாங்காங் டிசோ பகுதியில் சீனா தற்போது பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. 100க்கும் அதிகமான பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருகிறது. 100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியா அதிரடி
இந்தியாவும் அங்கு படைகளை தீவிரமாக குவித்து வருகிறது. நாங்கள் சாதாரணமான ரோந்து பணிகளை மட்டும் மேற்கொள்கிறோம், இந்தியாதான் அத்து மீறி வருகிறது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் சீனாவின் புகாரை இந்தியா மறுத்துள்ளது. இந்தியா சீனா மீது எதிர் புகார் வைத்துள்ளது. சீனாவின் அத்து மீறல்களை சாட்டிலைட் புகைப்படங்களும் ஆதாரங்களோடு நிரூபிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன விசித்திரம்
இந்தியாவின் எல்லையில் சீனா இப்படி அத்துமீறுவது புதிதல்ல. இந்த வருடம் மட்டும் சீனா 180 முறை இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளது. லடாக்கில் மட்டும் 140 முறை. 2019ல் மட்டும் மொத்தம் 497 முறை இந்திய எல்லையில் சீனா அத்து மீறி இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே லடாக் எல்லையில் தற்போது நடந்து வரும் மோதல் மற்றும் பிரச்சனை விசித்திரமானது என்று கூறுகிறார்கள். இப்போது நடக்கும் பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.
சிக்கலானது
- பின் வரும் காரணங்களுக்காக இந்த பிரச்சனை சிக்கலானதாக பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் லடாக்கில் ஒரு எல்லையில் மட்டுமின்றி லடாக்கில் இருக்கும் பல எல்லையில் சீனா அத்து மீறி வருகிறது.
- கல்வான் போன்ற இதற்கு எல்லை பிரச்சனையே இல்லாத லடாக் பகுதியில் கூட சீனா படைகளை குவித்து வருகிறது.
- சீனாவின் படை குவிப்பு போர் ஒத்திகை போல இருக்கிறது. அனைத்தும் சரியாக திட்டமிட்டு செய்யப்படுகிறது.
- இது எல்லையை வீரர்களின் அத்து மீறல் இல்லை. பெரிய மூத்த அதிகாரிகளின் திட்டமிடல் மற்றும் அரசின் ஆலோசனை இன்றி இப்படி அத்துமீற முடியாது.
- பங்கர் அமைத்து பணிகளை செய்வது, டென்ட் அமைப்பது, நவீன ஆயுதங்களை கொண்டு வருவது இதற்கு முன் நடக்கவில்லை.
லோக்கல் மிலிட்டரி
இது கண்டிப்பாக சீனாவின் லோக்கல் மிலிட்டரி அதிகாரியின் வேலையாக இருக்காது. கண்டிப்பாக இதில் ஏதாவது பெரிய காரணங்கள், திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனால்தான் அங்கு இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இதுதான் காரணம்
கொரோனாவின் தோற்றம் குறித்தும் உலக சுகாதார மையத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் சுதந்திர விசாரணைக்கு கோரிக்கை வைத்தது. அதேபோல் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா வளைத்து போட முயன்று வருகிறது. இதனால் சீனா இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது லடாக் சிக்கிம் எல்லையில் மிக மோசமான அத்துமீறல்கள் நடந்து வருகிறது.