'லே'வை நோக்கி நகர துடிக்கும் சீனா... சூசுல் பகுதியை ஆக்கிரமிக்க தொடர்ந்து குறிவைப்பதன் பின்னணி
டெல்லி: லடாக் பிராந்தியத்தில் சூசுல் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவல்களை நிகழ்த்தி வருகிறது. சூசுல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு என்பதால் சீனா தொடர்ந்து இப்பகுதிக்கு இலக்கு வைக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
கேட் வே ஆப் லே என அழைக்கப்படுவது சூசுல் பகுதி. லடாக்கின் கிழக்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய பாங்கோங் த்சோ ஏரியின் தென்பகுதியில் உள்ளது சூசுல்.
ஒரு பக்கம் ஷூட்டிங்.. படைகள் குவிப்பு.. இன்னொரு பக்கம் முப்படை தளபதிகள் அவசர மீட்டிங்.. பதற்றம்!
வான்படை தளம்
சூசுல் பள்ளத்தாக்கானது 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா யுத்தத்தின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த விமானப் படை தளமாக பயன்படுத்தப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் சீனா ராணுவம் இடையேயான முக்கியமான பேச்சுவார்த்தை மையங்களில் இதுவும் ஒன்று. அண்மையில் கூட இப்பகுதியில் இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தை இங்குதான் நடைபெற்றது.
லேவை நோக்கிய பாதை
இது சமவெளியாக இருப்பதால் ராணுவ தளவாடங்களை கொண்டு சேர்க்கும் பிரதான பாதையாகவும் இருக்கிறது. சூசுல் விமானப் படை தளமானது லே பகுதியை தரைமார்க்கமாக இணைக்கக் கூடியதும் ஆகும். சீனாவுக்கு எப்படி மால்டோ செக்டார் முக்கியமானதோ அதேபோல் இந்திய ராணுவத்துக்கும் சூசுல் செக்டார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
சூசுலை நோக்கி சீனா
சூசுல் பகுதிக்குள் சீனா நுழைந்துவிட்டால் லேவை நோக்கிய ராணுவ நடவடிக்கைளை அந்த் நாட்டு ராணுவத்தால் எளிதாக நகர்த்திவிட முடியும். 1962 அக்டோபரில் கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சீனா யுத்தத்தை தொடங்கிய போது சூசுலை தாக்கி ஆக்கிரமிக்கவும் சீனா முயற்சித்தது. ஆனால் 1962-ம் ஆண்டு நவம்பரில் 114வது ரெஜிமெண்ட் இந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தது.
அடித்து தூள் கிளப்பிய ராணுவம்
கடந்த ஆகஸ்ட் 29,30-ந் தேதிகளில் சூசுலை சுற்றிய மலைப்பகுதிகள் அனைத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதால் சீனா பின்வாங்கி ஓடியது. இங்குதான் திபெத் சிறப்புப் படையினரும் களமிறக்கப்பட்டனர். மலையேற்றங்களில் கைதேர்ந்தவர்கள் என்பதால் திபெத் படையினர் இதை எளிதாக சாதித்திருந்தனர். சூசுல் கிராமம் முழுவதும் திபெத்தியர்கள் வாழும் பகுதி.
ஆக்கிரமிப்பு முயற்சிகள் முறியடிப்பு
மலைகளில் நிறுத்தப்பட்ட ராணுவத்தினருக்கான அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் இவர்கள் பங்கு பிரதானமானது. சூசுலைப் போல் ஒவ்வொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியையும் அங்குலம் அங்குலமாக இந்திய ராணுவ வீரர்கள் கொட்டும் உறைபணியிலும் பாதுகாத்து வருகின்றனர். இதனால் எல்லையில் சீனாவின் தொடர் ஊடுருவல், ஆக்கிரமிப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டே வருகின்றன.