ஏன் இந்த திடீர் அக்கறை.. காங்கிரசின் தென் இந்தியா பாசம்.. எல்லாம் இதற்குத்தான்!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சி திடீரென தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது நல்ல முன்னெடுப்பாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
காங்கிரசோ, பாஜகவோ, தேசிய கட்சிகள் என்றாலே அவை இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சிகள் என்ற தோற்றம்தான், நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இதுவரை இருந்து வருகிறது.
இந்தி என்பதை முன்னிறுத்தியே அந்த கட்சிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
வயநாடு பேரணியில் விபத்து.. காயம்பட்ட செய்தியாளர்கள்.. பதறி அடித்து ஓடி வந்து காப்பாற்றிய ராகுல்!
பெயர்களை பார்த்துள்ளீர்களா
மார்க்கதர்ஷன மண்டல், காங்கிரஸ் காரிய கமிட்டி, பிரதேஷ் காங்கிரஸ், மங்கிபாத்.. இப்படி தென் இந்தியர்கள் வாயில் நுழையாத பெயர்களை கையாளுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் நிபுணர்கள். இதனால்தானோ என்னவோ, இந்த மண்ணுக்கும், மரபுக்கும் மாற்றாந்தாய் மக்கள் போல இக்கட்சிகளை பார்க்கும் சூழ்நிலை நிலவியது. ஆனால், இப்போது எல்லாம் மாறிப்போச்சு.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
இந்தியாவின் பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் அதை முன்னெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும். அதில் முதன்மையானது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தென்னகத்தின் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவே இருந்தது. தென்னகத்தை நோக்கியதாகவே இருந்தது.
புதுச்சேரி, மீனவர் நலன்
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதி, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களை குஷிப்படுத்த போதுமானதாக இருந்தது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற வாக்குறுதி தமிழகத்தை நோக்கியதாக இருந்தது. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அதிகப்படியாக தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், இம்முறை குறைந்தபட்சம் வாக்குறுதியை கொடுக்க அக்கட்சி முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது.
கடலோர மாநிலங்கள்
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் கடற்கரை கிடையாது. கோவா உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தும் மட்டுமே கடற்பரப்பை கொண்ட மாநிலங்கள். எனவே இதுவும் தென் இந்தியாவிற்கு விரிக்கப்படும் வாக்குறுதி வலைதான்.
வயநாட்டில் ராகுல் காந்தி
தென் மாநிலங்கள், அதிலும் குறிப்பாக தமிழகம் வலியுறுத்தக் கூடிய கல்வியை, மாநில பட்டியலுக்கு வழங்குவது தொடர்பான வாக்குறுதியும் அதில் இடம் பெற்றிருந்தது. மாநில சுயாட்சியை விரும்பும் தென் மாநிலங்களை குஷிப்படுத்தும் வகையில்தான் பெரும்பாலான வாக்குறுதிகள் இருந்தன. மற்றொரு முக்கிய திருப்பமாக, கேரளாவின் வயநாட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம், காங்கிரஸ் தென் இந்தியாவுக்கான கட்சியாக தன்னை திடீரென மாற்றிக்கொண்டுள்ளது.
கைவிட்ட வட மாநிலங்கள்
காங்கிரசின் இந்த மாற்றத்திற்கு காரணம், வட இந்தியாவில் அதன் வேர்கள் அசைக்கப்பட்டுவிட்டன என்பதுதான். அதுவும் இந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மமதாவும் கூட்டணி வைக்கவில்லை. வட இந்தியாவில் வாக்குகள் சிதறும் வாய்ப்பு இருப்பதால் அது பாஜகவுக்குதான் ஆதாயமே தவிர காங்கிரசுக்கு பெரும் அடிதான் விழும். ஆனால், தெற்கே அப்படியில்லை. இங்கு பாஜகதான் ரொம்ப வீக். காங்கிரஸுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் நல்ல நல்ல கூட்டணிகள் அமைந்துவிட்டன.
நல்லது நடக்கட்டும்
இப்படிப்பட்ட சூழலில்தான், தென் இந்தியாவை தனது ஃபோக்கசுக்குள் கொண்டுவந்துள்ளது காங்கிரஸ். இதன் மூலம், பாஜகவை வட இந்திய கட்சி என பிரச்சாரம் செய்து வீழ்த்த முடியும் என நினைக்கிறது காங்கிரஸ். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகியவற்றில் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும். தெலுங்கானாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறது காங்கிரஸ். என்னதான் சுயநலத்திற்காக இப்படியான மாற்றத்தை நோக்கி காங்கிரஸ் சென்றாலும், இப்போது பாஜகவும், காங்கிரசை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தேசிய கட்சிகள் தென்னகத்தை கனிவோடு பார்க்க வேண்டிய சூழல் வரும். இது நல்லதற்கே!