பிரதமர் மோடியை சந்தித்து பேசியது ஏன் - மவுனம் கலைத்த எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினோம் என்று பிரதமர் மோடி உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சசிகலாவின் ஆடியோ அரசியல் அதிமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்குமிடையே பனிப்போர் நிலவி வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தொலைக்காட்சி பேட்டிகள் ஆகியவை அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரின் டெல்லி பயணம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடியுடன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. தீவிர ஆலோசனை
சசிகலா மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றப் போவதாக சசிகலா பேசி வருவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லியில் முகாமிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
ஒபிஎஸ் இபிஎஸ் பயணம்
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதுபோல அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவு கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
ஒபிஎஸ் இபிஎஸ் சந்திப்பு
இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அவர்களுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தளவாய் சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை
அப்போது பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை பிரச்சனை, நீட் தேர்வு ரத்து விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஆகியவை குறித்து மனுக்களில் வலியுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
மேகதாது அணை
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் தெரிவித்தோம்.
அதிருப்தி இல்லை
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கட்டுக்கோப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக. கட்சி தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை என்று கூறினார்.
சசிகலா
லாட்டரி சீட்டுகளை தமிழகத்தில் கொண்டு வர திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அறிக்கை வெளியிட்டோம் என்றார். இதனையடுத்து சசிகலா பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு சென்றார்.
தலைவர்களுடன் சந்திப்பு
பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். உட்கட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் அதிமுக தலைவர்கள் இன்று பிற்பகல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.