1997-ல் அணுகுண்டு சோதனை நடத்த பிடிவாதமாக அனுமதி மறுத்தது ஏன்? மாஜி பிரதமர் தேவகவுடா பரபர தகவல்
டெல்லி: 1997-ம் ஆண்டு நமது விஞ்ஞானிகள் அணுகுண்டு சோதனை நடத்த முயன்ற போது அதற்கு பிடிவாதமாக தாம் அனுமதி மறுத்து மூன்று காரணங்களை முன்வைத்ததாக முன்னாள் பிரதமர் தேவகவுடா விளக்கம் அளித்துள்ளார்.
"Furrows in a Field: The Unexplored Life of H.D. Deve Gowda" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் சுகாதா ஶ்ரீனிவாசராஜூ தேவகவுடாவின் சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் 1997-ல் தேவகவுடா பிரதமராக இருந்த போது அணுகுண்டு சோதனை நடத்த விஞ்ஞானிகள் முயற்சித்த போது தாம் அனுமதி மறுத்தது குறித்து சுகாதா ஶ்ரீனிவாசராஜூவிடம் தேவகவுடா தெரிவித்த கருத்துகள் பதிவாகி உள்ளன.
TNPSC 2022 : டிஎன்பிஎஸ்சி - குரூப் 4, விஏஓ முதல் சுற்றுலாத்துறை வரை எந்த மாதத்தில் அரசுத் தேர்வு
அதாவது 1997-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய விஞ்ஞானிகள் அணு குண்டு சோதனைக்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போதைய பிரதமர் தேவகவுடா குறைந்தபட்சம் ஓராண்டாவது காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தேவகவுடா சொன்ன 3 காரணங்கள்
அணு குண்டு சோதனை நடத்துவதற்கு அனுமதி மறுத்த தேவகவுடா 3 காரணங்களை முன்வைத்தார். அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெருக்கடி; பாகிஸ்தானுடனான நட்புறவை வளர்க்க விரும்பியது; பொருளாதார சூழ்நிலை ஆகிய 3 காரணங்களுக்காக அணு சோதனை நடத்த அனுமதி தர மறுத்தார் என்கிறது இந்த புத்தகம்.
சந்தித்த 2 விஞ்ஞானிகள்
இது தொடர்பாக இப்புத்தக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் சுகாதா ஶ்ரீனிவாசராஜூவிடம் தேவகவுடா கூறியிருப்பதாவது: 1997-ம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ராஜகோபால் சிதம்பரம், இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல்கலாமும் என்னை சந்தித்தனர். இருவரும் அணு குண்டு சோதனைக்கு அனுமதி கோரினர். வர்களிடம் நான், "உங்களுக்கு அனுமதி தருகிறேன். உங்களுக்கு நான் நிறைய பணம் தருகிறேன். ஆனால் ஓராண்டு காலம் பொறுத்திருங்கள்" என்றேன். மேலும் "அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடுவதற்கு கடும் நெருக்கடி தரப்படுகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் நல்லுறவை மேம்படுத்தவும் விரும்புகிறேன். அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமையும் நிலைத்தன்மை கொண்டதாக இருக்க சிறிது காலம் தேவைப்படுகிறது. அதற்காக பொருளாதார தடைகள் குறித்து நான் அச்சப்படவில்லை. ஆனால் சிறிது கால அவகாசம் தேவை என்று கூறினேன்.
பிடிவாதமாக அனுமதி மறுப்பு
நான் தெரிவித்த கருத்துகளால் இருவரும் அதிருப்தி அடைந்தனர். அணு குண்டு சோதனை நடத்தினால் உலக நாடுகள் இந்தியாவை வல்லரசாகப் பார்க்கும் என்றும் ராஜகோபால் சிதம்பரமும் அப்துல்கலாமும் கூறினர். ஆனால் நானோ, உங்களால் நாளையே அணுகுண்டு சோதனை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும். நான் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு எதிரானவன் அல்ல. எனக்கு என சில முன்னுரிமைகள் உள்ளன. ஆகையால் எனக்கு ஓராண்டு காலம் அனுமதி வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
வாஜ்பாய்- ஜெயலலிதா- அணு குண்டு சோதனை
பின்னர் பிரதமரான வாஜ்பாய்-க்கு அரசியல் நிலையற்ற தன்மை குறித்து நன்கு தெரியும். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக நம்பகமில்லாத கூட்டணி கட்சி என்பதை வாஜ்பாய் உணர்ந்திருந்தார். அந்த கால கட்டத்தில் அணுகுண்டு சோதனையை தேசியவாத முழக்கமாக வாஜ்பாய் மாற்றியது எதிர்பார்க்காத ஒன்று. பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்திய போது 5 கோடி பாகிஸ்தானியர்களும் 90 கோடி இந்தியர்களும் சமம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. இந்திய தமது ராஜதந்திர யுக்தியை அப்போது இழந்து நின்றது. இவ்வாறு அந்த புத்தகத்தில் தேவகவுடா கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.