இந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன்? மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு
டெல்லி: நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடியாதபோது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசியின் இரண்டாம்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. அதில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் ஏன்
இந்நிலையில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைவரையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கொரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தற்போது போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி
நம் நாட்டிலேயே இன்னும் பல கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வெளிநாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வணிக ரீதியிலும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன் என்றும் நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது. ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்தியா நட்பு ரீதியாகவும், பிரேசில் போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியாகவும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தவில்லை
நாட்டில் உள்ள மருந்து நிறுவனங்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றும் தற்போதுள்ள அவசரநிலையை உணர்ந்து இந்தியர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போராட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியையே சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அந்தத் தடுப்பூசி 74% பலனளிக்கும். அதேநேரம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கோவாக்சின் 81% பலனளிக்கும் என்பது மூன்றாம்கட்ட முடிவுகளில் தெரியவந்துள்ளது.