டுவிஸ்ட்.. சசிதரூர் “ஷாக்” - கழற்றிவிட்ட “ஜி 23”.. நேரு குடும்ப சாய்ஸான கார்கேவை ஆதரிப்பது ஏன்?
டெல்லி: வரும் அக்டோபர் 17 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் ஜி 23 அதிருப்திக் குழுவை சேர்ந்தவர்கள் சசி தரூரை காட்டிலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
நடைபயணம் பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள்? மகிளா காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரித்த ராகுல் காந்தி!
ஜி 23 குழு
காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின. குலாம் நபி ஆசாத் தலைமையில் ஜி 23 என்ற பெயரில் அதிருப்திக்குழு காங்கிரஸில் உருவானது. காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இதில் குலாம் நபி ஆசாத் வேறு கட்சியை தொடங்கினாலும், மனிஷ் திவாரி, ஆனந்த் ஷர்மா, பிரித்விராஜ் சவான், பூபிந்தர் ஹூடா உள்ளிட்டோர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி நேற்று (செப். 30 ஆம் தேதி) வரை நிறைவடைந்தது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்க காந்தி குடும்பம் முடிவு செய்தது. அதேபோல் சசி தரூர், மல்லிகார்ஜுன் கார்கே, திக் விஜய் சிங் ஆகியோரும் போட்டியிட திட்டமிட்டனர்.
ராஜஸ்தான் குழப்பம்
இந்த நிலையில் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சச்சின் பைலட் முதலமைச்சராவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட் மீது அதிருப்தியடைந்த நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் போட்டியிடுவதால் திக் விஜய் சிங்கும் இதிலிருந்து விலகினார். 2 தலைவர்களும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
ஜி-23 ஆதரவு
இதேபோல் ஜி 23 தலைவர்களும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவளித்துள்ளனர். அந்த குழுவில் உள்ள மனிஷ் திவாரி, ஆனந்த் ஷர்மா, பிரித்விராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் கார்கேவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். ஜி 23 குழுவில் இருக்கும் சசி தரூரை காட்டிலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, அதிருப்தி தலைவர்கள் ஆதரவளிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நிறைவேறும் கோரிக்கை
இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பிருத்விராஜ் சவான் தெரிவிக்கையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு நாங்கள் எழுதிய கடிதத்தில் முன்வைத்தது 2 கோரிக்கைகள் மட்டும்தான். முதலாவது, கட்சிக்கு முழுநேர தலைவர் இருக்க வேண்டும் என்பது. அடுத்து கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது. 2 ஆண்டுகள் கழித்து இது நிறைவேறுகிறது." என்றார்.
கார்கேவுக்கு ஆதரவு
சசி தரூர் ஜி 23 குழுவில் முறையாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. கார்கே காந்தி குடும்பத்தின் ஆதரவாளராக இருந்தாலும் அவருடன் சசி தரூரை ஒப்பிடுவதை ஜி 23 குழுவினரே விரும்பவில்லையாம். கார்கே ஒரு இயக்கவாதி என்றும், கட்சித் தொண்டர்களை புரிந்து நடந்துகொள்வதுடன் அவரோடு சகஜமாக பேச முடியும் எனவும் கூறுகிறார்கள். கார்கே அளவுக்கு சசி தரூர் அதிக நாட்கள் கட்சியில் நீடிக்கவில்லை என மற்றொரு நிர்வாகி கூறுகிறார்.
சசி தரூர் விளக்கம்
"இதில் இருக்கும் ஒரு சிக்கல் கார்கேவின் வயதுதான். 80 வயதை நெருங்கி அவரால் அதிகளவில் உடல் உழைப்பை காட்டுவது சிரமம்தான்." என்றார். இதுகுறித்து பேசிய சசி தரூர், "ஜி 23 என்பதை ஒரு குழுவாகவே ஏற்க முடியாது. அவர்கள் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியவர்கள் அவ்வளவுதான். கட்சியின் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தங்கள் பின்னால் ஆதரவாளர்களை திரட்ட உரிமை உண்டு." என்றார்.