ஹத்ராஸ்.. பெண் உடலை இரவோடு எரித்தது ஏன்? உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கூறிய காரணத்தை பாருங்க
டெல்லி: ஹத்ராசில், தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாலையில் அப்பெண் உடலை போலீசார் தகனம் செய்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.
ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதாகும் தலித் இளம் பெண், நான்கு பேர் கொண்ட மேல்ஜாதி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி 2 வாரங்கள் கழித்து, உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த போலீசார் அதிகாலை 2.30 மணிக்கு ஊருக்கு வெளியே தீயிட்டு தகனம் செய்தனர்.
பெரும் அதிர்ச்சி
பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அந்த உடலை தங்களிடம் தந்து விடுமாறும், தங்கள் முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டுக் கொண்டும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. உடல் எரிக்கப்பட்டதால், மறுபிரேத பரிசோதனை செய்வது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட முடியாமல் தடயம் அழிந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
எனவே குற்றவாளிகளுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் இணைந்து தாக்கல் செய்த வழக்கில், இன்று 16 பக்க பிரமாண பத்திரத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு தாக்கல் செய்துள்ளது.
வன்முறை நடந்துவிடும்
உத்தர பிரதேச மாநில அரசு அளித்த பதிலில், பெண் உடலை கிராமத்தில் வைத்திருந்தால் மறுநாள் வன்முறைச் சம்பவங்கள் நிகழும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்துதான் அதிகாலையில் உடல் எரிக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை சூழல் ஏற்படாமல் இருக்க அந்த பெண்ணின் உடலை எரிக்க அவரது குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர். சட்டம்-ஒழுங்கு அமைதியை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதே தவிர பின்னணியில் வேறு திட்டம் எதுவும் கிடையாது. ஏற்கனவே அந்த உடல் முழுமையாக பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது.
சிபிஐ விசாரணைக்கு சம்மதம்
ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மதம் மற்றும் ஜாதி ரீதியாக மோதல்களை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரித்து அதை உச்சநீதிமன்றம் கண்காணித்து குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட வேண்டும். சில அரசியல் கட்சிகளும், சில மீடியாக்களும் யோகி ஆதித்யநாத் அரசு மீது களங்கம் கற்பிக்க திட்டமிடுகிறார்கள். போராட்டங்களை சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அந்த பிரமாணப் பத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரிக்கும் நீதிமன்றம்
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக அக்டோபர் 10ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.