எய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன்? அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லாமல், குருக்ராமில் ஒரு ஒரு தனியார் மருத்துவமனையை தேர்வு செய்யது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு கொரோனாவிற்கான லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார்.அத்துடன் அவர் சமீப காலங்களில் தன்னை தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
கேபினட் மீட்டிங்கின்போது பிரதமரை சந்தித்தார் அமித்ஷா.. மோடிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷா தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் தனது ட்விட் பதிவில், "எங்கள் உள்துறை அமைச்சர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை, ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்று ஆச்சரியப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை 'நவீன இந்தியாவின் கோயில்கள்' என்ற பதிவுக்கு பதில் அளித்து இந்த பதிவனை சசிதரூர் வெளியிட்டிருந்தார். அத்துடன் பொது மருத்துவமனைகளின் மீது மக்கள் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமென்றால் சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு தேவை" என்றும் கூறியுள்ளார்.