டெப்சாங் பகுதியில் 18 கி.மீ. சீனா ஊடுருவல்.. மெளனம் காக்கும் இந்தியா.. பின்னணி என்ன?
டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 4 சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. ஆனால், வடக்கு லடாக் பகுதியிலுள்ள டெப்சாங் சமவெளி பகுதியில், சீன படைகள் ஊடுருவியுள்ளது குறித்து இந்திய தரப்பு அந்த பேச்சுவார்த்தையின்போது குறிப்பிடவில்லை என்கிறது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை.
இவ்வாறு பேச்சுவார்த்தையில் இந்த விஷயம் முன்னெடுக்கப்படாவிட்டால், சீனா அந்த பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
இதுகுறித்த அக்கட்டுரையின் சாராம்சம்: டெப்சாங் சமவெளி பகுதியின், உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) இடத்தில் இந்திய ராணுவம் ரோந்து செல்வது வழக்கம். இப்போது, சீன ராணுவத்தால், அது தடுக்கப்பட்டுள்ளது. பாங்காங் த்சோ பகுதியை விடவும், இது பெரிய நிலப்பரப்பு.
ஆனால், பேச்சுவார்த்தையின்போது டெப்சாங் பகுதி நிலவரம் குறித்து இந்திய தரப்பு வலியுறுத்தவில்லை. இப்படியே மவுனமாக இருந்தால், எல்லை மாற்றியமைக்கப்படும் நிலை உருவாகிவிடும். பழையபடியான (status quo)எல்லை நிலவரமே தொடர வேண்டும் என பேச்சுவார்த்தையில் முடிவெடுத்தாலும், டெப்சாங் பகுதியில் சீனா ஆக்கிரமித்த பகுதிகள் அவர்களுடையது என்று ஆகிவிடும்.
10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்
முக்கியமான பகுதி
டெப்சாங் என்பது, பூகோள ரீதியில் முக்கியமான பகுதி. அங்கு மேற்கில், 18 கி.மீ தூரம் சீனா தனது எல்லையை மாற்றியமைத்து நமது பகுதியை ஆக்கிரமித்துள்ளது. "பாங்கோங் ஏரியை விட டெப்சாங் பூகோள ரீதியாக நமக்கு மிகவும் முக்கியமானது. தவுலத் பெக் ஒல்டி பகுதிக்கும், கரகோரம் பிராந்தியத்துக்கும் இந்தியா தொடர்புகொள்ளும் பகுதி இது. டி.எஸ்.டி.பி.ஓ சாலை இங்கிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே எல்லையில் மாற்றம் ஏற்படுவது நமக்கு பாதகமாகிவிடும்" என்கிறார், முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா.
மேற்கே நகரும் சீனா
மேற்கு நோக்கி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நகர்த்துவதன் மூலம், மேற்கு நெடுஞ்சாலைக்கு மேலும் பாதுகாப்பு கிடைக்கும் என சீனா நினைக்கிறது. இந்த சாலைதான், திபெத் மற்றும் ஜின்ஜியாங் பகுதிகளை இணைக்க கூடியது ஆகும். மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் அந்த நாளிதழிடம் கூறுகையில், இதுவவரை நடந்த பேச்சுவார்த்தையில், டெப்சாங் நிலவரம் குறித்து இந்திய தரப்பு எதையும் தெரிவிக்கவில்லை. பிற 4 பகுதிகளில் நிலவும் மோதல் பற்றி மட்டும்தான் பேசப்பட்டது. ஒருவேளை இனிமேல் பேசப்படலாமோ என்னவோ தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
வேண்டுமென்றே தவிர்ப்பு?
இந்திய தரப்பு வேண்டுமென்றேதான், டெப்சாங் குறித்து பேசாமல் இருப்பதாகவும், ராணுவத்தின் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனவாம். பாங்காங் பகுதியிலிருந்து சீனப் படைகள் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் இதற்கான காரணமாக இருக்க கூடுமாம். ஏப்ரல் மாதத்தில் எப்படியான எல்லை நிலவரம் இருந்ததோ, அதேபோல பாங்காங் பகுதி மாறட்டும். இப்போதைக்கு, டெப்சாங் பற்றி பேச வேண்டாம் என வேண்டுமென்றே தவிர்க்க கூடும் என தெரிகிறது.
ரோந்து இல்லை
டெப்சாங் மற்றும் பேங்காங் ஆகிய இரு பகுதிகளிலும், இரு நாட்டு ராணுவ வீரர்களும் ரோந்து சுற்றுவது வாடிக்கை. ஆனால் இப்போதைய மோதலுக்கு பிறகு, இரு பகுதிகளிலும், இந்திய ராணுவத்தினரை ரோந்து செய்ய சீன ராணுவம் அனுமதிப்பதில்லை. ஆனால் டெப்சாங் பகுதியை விடவும், பேங்காங் த்சோ பகுதி குறித்துதான் தேசிய அளவில் விவாதிக்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலா பிராந்தியம் என்பதும், மக்களிடம் எளிதில் கவனம் பெற காரணமாக இருந்திருக்கும்.
3 வருடமாக இப்படித்தான்
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர், அந்த நாளிதழிடம் கூறுகையில், 2017ம் ஆண்டு முதலே, டெப்சங் பகுதியில், இந்திய ராணுவத்தால் ரோந்து செல்ல முடியவில்லை. இந்த எல்லை மோதல் புதிதாக உருவானது கிடையாது. எனவே, இதை பேசாமல் இந்திய தரப்பு தவிர்க்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் ஒரு ராணுவ அதிகாரியோ, டெப்சாங் பகுதியில் சமீப காலம் வரை இந்திய ராணுவம் ரோந்து சென்றதாக மறுப்பு தெரிவிக்கிறார்.
சீனா அட்டகாசம்
ஹூடா இதுகுறித்து மேலும் கூறுகையில், "2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டையொட்டி, இந்தியப் பகுதிக்குள் புகுந்து சீனா கண்காணிப்பு கோபுரத்தை அமைத்தது. ஆனால் அது, இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்டது" என்றார். ஒய் சந்திப்பு என்று அழைக்கப்படும் பகுதியில் இந்திய வீரர்களின் ரோந்து பணியை, சீனா தடுக்கிறது. இந்த பகுதி, லடாக்கின், தவுலத் பெக் ஒல்டி விமானபடை தளத்திலிருந்து 30 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ளது. டிஎஸ்டிபிஓ சாலையில் அமைந்துள்ள பர்ட்ஸ் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த பகுதி. இப்பகுதியில் சீனா தடுப்பதால், இந்திய ராணுவ வீரர்களால், ரோந்து பாயிண்ட் 10, (பிபி -10), ரோந்து பாயிண்ட் 11 (பிபி -11), ரோந்து பாயிண்ட் 11ஏ (பிபி -11 ஏ), ரோந்து பாயிண்ட் 12 (பிபி -12) மற்றும் ரோந்து பாயிண்ட் 13 (பிபி -13) ஆகிய 5 ரோந்து பாயிண்ட்களுக்கு இந்திய வீரர்கள் ரோந்து செல்ல முடியவில்லை.
இந்த ரோந்து பாயிண்ட்கள், ராக்கி நாலாவிலிருந்து ஜீவன் நாலா வரையிலான பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம், சீனாவுடனான, எல்லை கோட்டுக்கு மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராணுவ ரோந்து பாதையின் எல்லை என்றும் இது அழைக்கப்படுகிறது.