செம சான்ஸ் மிஸ்.. சூப்பர் ஓவர் சொதப்பல்.. மயங்க் அகர்வால் மீது ராகுலுக்கு என்ன ஆத்திரம்?
டெல்லி: அம்பயர் கோட்டைவிட்டது ஒரு பக்கம் என்றால்.. பஞ்சாப் அணி முக்கியமான நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த இரண்டு தவறுகள் டெல்லி அணியுடன், மோசமான தோல்விக்கு வழிவகுத்து விட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டை'யில் முடிந்தது உங்களுக்கே தெரியும்.
இரண்டு அணிகளும் சொல்லி வைத்தது மாதிரி 20 ஓவர் முடிவில் 157 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழக்க.. போட்டி டை ஆனது.
மீட்பர்கள்
அது மட்டும் கிடையாது. இரண்டு அணிகளுமே தட்டுத் தடுமாறிய போது மீட்பதற்கு ஒரு மீட்பர் வந்தார். முதலில் ஆடிய டெல்லி அணிக்கு மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஒரு மீட்பர் என்றால்.. பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் மீட்பராக வந்து சேர்ந்தார். எனவேதான் இரு அணிகளும் கவுரவமான ஸ்கோரை எட்டின.
தனி ஒருவர்
குறைந்த ஸ்கோர்தான், என்ற போதிலும் டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததன் காரணமாக பஞ்சாப் அணி சேசிங் செய்யும் போது தடுமாறியது. குறிப்பாக ஒரே ஓவரில் அஸ்வின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் பஞ்சாப் அணி தடுமாறத் தொடங்கியது. அந்த நிலையில் தனி ஒருவராக நின்று போராடினார் மயங்க் அகர்வால்.
திறமைசாலி மயங்க் அகர்வால்
விராட் கோலி ஐபிஎல் தொடரில் களமிறங்கியபோது, மயங்க் அகர்வாலும் கால் பதித்தார். ஆனால் கோலி புகழ்பெற்ற அளவுக்கு மயங்க் அகர்வால் இன்னமும் லைம் லைட்டுக்கு வரவில்லை. அதற்காக திறமையில் குறைந்தவர் என்று கூறிவிட முடியாது. பல்வேறு இன்னிங்ஸ்களை இவரது திறமைக்கு உதாரணமாகக் கூறலாம். நேற்றைய போட்டியும் அப்படித்தான். முதல் 44 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து மறுமுனையில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார் மயங்க் அகர்வால். நல்ல பொறுப்புணர்வு அவரது ஆட்டத்தில் தெரிந்தது. பதட்டம் ஏற்படவில்லை.
அதிரடி, சரவெடி
அதே நேரம், எப்போது தேவையோ அப்போது அடித்து ஆடவும் தயங்கவில்லை. கடைசி 16 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அப்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட், 256 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செம டச்சில் அவர் இருந்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் பந்தை ஆப் சைடில் தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் செய்யப்பட்டார் மயங்க் அகர்வால்.
பெரிய தப்பு
தரையோடு அடித்து சிங்கிள் ரன் ஓடியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு.. அல்லது ஏற்கனவே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்ததால் மிகுந்த தன்னம்பிக்கையில் அவ்வாறு ஒரு ஷாட்டை அவர் அடித்து இருக்கக்கூடும். இது பஞ்சாப் அணி செய்த மிகப் பெரிய தவறு. அடுத்த பந்தில், அதாவது, கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்த விக்கெட்டும் விழுந்ததால் தான் மேட்ச் டிரா ஆனது.
அகர்வால் களமிறங்கவில்லை
இதைக் கூட மன்னித்துவிடலாம். உணர்ச்சி வேகத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள். ஆனால், சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் செய்த தவறுதான் மன்னிக்க மட்டுமல்ல.. இந்த ஐபிஎல் தொடர் முழுக்க மறக்கவே முடியாத தவறாக மாறிவிட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது பஞ்சாப். மயங்க் அகர்வால் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், ராகுல், நான்தான் பெரிய கில்லாடி என்பதை போல பேட் செய்ய வந்துவிட்டார். முதல் பந்தில் 2 ரன் அடித்து விட்டு அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறிவிட்டார். இது போதாது என்று மறுமுனையில் யாரை இறக்கினார் தெரியுமா? பூரன். ராகுலாவது, போட்டியின்போது 21 ரன்கள் எடுத்தார். அந்த தைரியத்தில் சூப்பர் ஓவரில் இறங்கினார் என்று வைத்துக்கொள்வோம். பூரன் தடுமாறி அவுட்டாகி சென்றவர். அவரை ஏன் அகர்வாலுக்கு பதிலாக கூட்டி வந்தார்கள் என்பது புரியவில்லை.
விபரீதம்
அதுவும் தற்போதைய கிரிக்கெட் உலகின் முன்னணி பவுலர் ரபடாதான், சூப்பர் ஓவரில் பந்து வீசுவார் என்று நன்கு தெரிந்தும், டச்சில் இல்லாத பூரனை கூட்டி வந்தார் ராகுல். ஆனால், அவர் பஞ்சாப் அணி முகத்தில் பூரான் போட்டுவிட்டார். இரண்டு விக்கெட்டுகள் போனதால் அதற்கு மேல் யாரையும் களமிறக்க முடியாது என்பதால், 2 ரன்களுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டெல்லி அணி இந்த இலக்கை எளிதாக அடைந்து விட்டது.
ராகுல் பெரும் தவறு
ராகுல் மற்றும் பூரன் ஆகிய இருவரும் களமிறங்கிய போது ரசிகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எழும் கேள்வி, மயங்க் அகர்வால் எதற்காக களமிறக்கப்படவில்லை என்பதுதான். ஏனெனில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கடைசி நேரத்தில்தான் மிகுந்த அதிரடி காட்டிக் கொண்டிருந்தார் அகர்வால். அப்படி சிறப்பான டச்சில் இருக்கும் வீரர், அதே வேகத்துடன் அதிரடியை தொடங்கியிருந்தால் வெறி கொண்ட வேங்கையாக புகுந்து விளையாடியிருப்பார். டெல்லி அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து இருக்க முடியும். ஆனால் டச்சில் இல்லாத இரண்டு பேட்ஸ்மேன்கள் இறங்கி மொத்தத்தையும் சல்லி சலியாக நொறுக்கிவிட்டனர். ஒருவேளை கைக்கு வந்த வெற்றியை பறி கொடுத்துவிட்டார் என்று மயங்க் மீது ராகுலுக்கு கோபமோ?