பிடிவாதம் காட்டிய "இளைஞரணி".. தலைநகரில் திடீர் குழப்பத்திற்கு காரணம் என்ன?.. விவரிக்கும் "50+"
டெல்லி: டெல்லிக்குள் நுழைய வேண்டும் என ஒரு தரப்பு விவசாயிகள் பிடிவாதம் காட்டியதால்தான் இது போன்ற தடியடி, தள்ளுமுள்ளு குழப்பம் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
வேளாண் சட்டத்தை நீக்கக் கோரி டெல்லியில் 62 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகள் குடியரசு பேரணி என இன்று டெல்லி எல்லையில் நடத்தி வருகிறார்கள்.
ஆயிரக்கணக்கான பேரணிகள் டெல்லி எல்லையில் அணிவகுத்துள்ளன. இன்று குடியரசு தின விழா என்பதால் டெல்லி ராஜபாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு விவசாயிகள் பேரணி நடத்த தடை விதித்தது.
பேரணி
இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட பாதைக்கு பதிலாக வேறு ஒரு பாதையில் பேரணி செல்ல போலீஸார் விவசாயிகளை வலியுறுத்தினர். இதனால் போலீஸாருடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். போலீஸார் வாகனங்களை விவசாயிகள் கைப்பற்றினர். இதனால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
அதிர்ச்சி
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். பதிலுக்கு விவசாயிகளும் போலீஸாரை தாக்கியதால் அங்கு பதற்றமான சூழல் எழுந்தது. ஏற்கெனவே ஒரு ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட போது கூட மிகவும் அழகாக பகுதி பகுதியாக போராட்டக் களங்களில் அமைதியாக நடத்திய நிலையில் தற்போது மட்டும் தடியடி, தள்ளுமுள்ளு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த பேரணி அமைதியாக எந்த கலவரமும் நடைபெறாது என்றுதான் நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் போலீஸார்தான் எங்கள் மீது தடியடி நடத்தினார். நாங்கள் அவர்களை எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் இரு அணிகள் உள்ளன. போலீஸார் தடியடி நடத்தியது எங்கள் அணி மீது அல்ல, சிங்குவில் இருந்த மற்றொரு அணி மீதுதான்.
இளைஞர்கள்
அந்த அணி மீதுதான் தடியடியும் நடத்தப்பட்டது. எங்கள் அணியினர் பின்னாடி வந்து கொண்டிருக்கிறோம். எங்களுடையது 30 அணி உள்ளது. இநத 30 அணியும் அமைதியாகத்தான் வந்து கொண்டிருக்கிறது. முன்னாடி போன வேறு ஒரு விவசாய அணியில் இளைஞர்கள் அதிகம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது அரசின் சாலை, அதனால் நாங்கள் போலீஸ் அனுமதி அளித்த சாலை வழியாக பேரணி செல்ல மாட்டோம்.
சுதந்திர நாடு
டெல்லிக்குள் நுழையும் வழியில்தான் செல்வோம் என்கிறார்கள். இது சுதந்திர நாடு, டெல்லி எங்கள் தலைநகரம், எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என்கிறார்கள். இதை அரசும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசவே இளைஞர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியிருக்கலாம். அரசாங்கம் ஏதாவது விபரீதம் நடந்தால் இளைஞர் விவசாயிகளை நாங்கள் கன்ட்ரோல் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.