காங்கிரஸ் பதவியேற்பு விழா.. ஆல் பிரசென்ட்.. ஆனா அந்த 3 பேர் மட்டும் மிஸ்ஸிங்.. பரபர பின்னணி என்ன?
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் வராததன் பின்னணியால் தற்போது கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டனர். இதை வெளிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சிகளின் விழாக்களில் பரஸ்பரம் கலந்து கொள்கின்றனர்.
கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்படி நேற்று நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எச் டி தேவ கௌடா, கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, எல்ஜேடி தலைவர் சரத் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எம்பி கனிமொழி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சலசலப்பு
எனினும் இந்த விழாவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அரசியல்
குடும்ப அவசர வேலை காரணமாக தான் வரவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாக்கு போக்கு கூறினாலும் உண்மையில் காரணம் என்ன என்பதை அரசியல் நோக்காளர்கள் அலசி விட்டனர். அப்படியே அவசர வேலையாக சென்றிருந்தாலும் தன் கட்சி பிரதிநிதி ஒருவரையாவது அவர் அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
அதிருப்தி
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கூட்டணி என்று வரும் போது மற்ற கட்சித் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக ஸ்டாலின் கூறியதில் இவர்கள் மூவருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மரியாதை
இதை திரிணமூல் கட்சி வட்டாரங்கள் நேற்றே அறிவித்துவிட்டன. அதாவது லோக்சபா தேர்தல் நடந்தபிறகுதான் பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஸ்டாலினோ அந்த மரபையும் பின்பற்றாமல் கூட்டணி கட்சிகளுக்கும் மரியாதை அளிக்காமல் அறிவித்துவிட்டார்.
மாயாவதி பெயர்
எதிர்க்கட்சிகள் சார்பில் தலித் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தனது பெயர் முதலிடத்தில் இருக்கும் என்பது மாயாவதியின் கணக்கு. இந்த நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால் மாயாவதியும் அதிருப்தியில் உள்ளார்.
கூட்டணிக்குள் விரிசல்
ஆனால் அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் தன் சார்பில் எம்எல்ஏ ராஜேஷ் குமாரை அனுப்பி வைத்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.