சிக்கலில் மற்றொரு தன்னாட்சி அமைப்பு.. மத்திய அரசுக்கு எதிராக புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா
டெல்லி: நாட்டின் மற்றொரு முக்கிய அமைப்பும் சீர்குலைவிற்கு உள்ளாகியுள்ளது. இந்த முறை, தேசிய புள்ளியியல் ஆணையம் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள அமைப்பாகும்.
தேசிய புள்ளியியல் ஆணையம், செயல் தலைவர் பி.சி.மோகனன் மற்றும் உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஆகியோர் பதவி விலகினர்.
மத்திய புள்ளியில் மற்றும் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புதான், தேசிய புள்ளியியல் ஆணையம்.
மத்திய அரசு மறுப்பு
இந்த அமைப்புதான், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளை தயாரிக்கும் அதிகபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. ஆனால் அந்த ஆணையம் தயாரித்த வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டதால் அதிருப்தியடைந்து இந்த ராஜினாமா முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
தன்னாட்சி அமைப்புகள்
ஏற்கனவே ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்புகளில் ஆளும் பாஜக அரசின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த அமைப்புகளிலும் உச்சபட்ச பதவியில் இருந்தவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலைியல் தேசிய புள்ளியியல் ஆணையத்திலும் குழப்பம் உருவாகியுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கலந்தாலோசிக்கவில்லை
இதுகுறித்து பி.சி.மோகனன் கூறுகையில், எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு செயல்படுகிறது. எங்களை அரசு தொடர்ந்து ஓரம்கட்டி வந்தது. தேசிய புள்ளியியல் ஆணையத்தின் சமீபத்திய சர்வே முடிவுகளை அரசு செயல்படுத்தவில்லை. 2017-2018ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வேலைவாய்ப்பு சர்வேயை அமல்படுத்தவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார் அவர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
வேலைவாய்ப்பு தொடர்பான தேசிய புள்ளியியல் ஆணைய தரவுகள் வெளியிடப்படாத நிலையில் கடந்த 10 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட புள்ளி விவரங்களை நிதி ஆயோக் தயாரித்து வெளியிட்டது. அதில் கடந்த ஆட்சியைவிட தற்போதைய மோடி ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக கூறப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இருவர் மட்டுமே
இந்த இரு ராஜினாமாக்களால் இப்போது மத்திய புள்ளியியல் ஆணையம் ஏறத்தாழ செயல்படாமல் போய்விட்டது. இப்போது நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கந்த் மற்றும் தலைமை புள்ளியியலாளர் பிரவீன் ஸ்ரீவத்சவா ஆகியோர் மட்டும் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரசு மறுப்பு
இதனிடையே மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இக்குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும், தங்கள் பிரச்சினை குறித்து ராஜினாமா செய்த உறுப்பினர்கள் எதுவும் தெரிவித்ததில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12ம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிக்கப்பட்டுள்ளது. இதை தேசிய புள்ளியியல் அக்கவுண்ட்ஸ் அறிவுரை கமிட்டி ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.