என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? கேட்கிறார் பிரசாந்த் கிஷோர்
டெல்லி: என்.ஆர்.சி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை எதையுமே இதுவரை வெளியிடாதது ஏன் என்று ஜேடியூ துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்ற போதும் சிஏஏ, என்.ஆர்.சி. ஆகியவற்றை அதன் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது ஜேடியூவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாவது:
10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் என்.ஆர்.சியை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளனர். நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இதனை அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் திட்டவட்டமான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸை பொறுத்தவரையில் செயற்குழுதான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இதுவரையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தமட்டோம் என அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏன் வெளிப்படையாக அறிக்கை எதனையுமே வெளியிடவில்லை?
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது 2003-ல் உருவாக்கப்பட்டது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ்தான் மத்திய அரசில் இருந்தது. இந்த சட்ட திருத்தம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனில் காங்கிரஸ் ஆட்சியில் உரிய திருத்தம் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் அதை காங்கிரஸ் செய்யவில்லை?
என்.பி.ஆர்., என்.ஆர்.சி இரண்டும் தொடர்புடையது அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதை ஏற்க முடியாது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை யாரும் நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை. மேற்கு வங்க தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியும் என்.ஆர்.சி. குறித்து பேசியுள்ளார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.