ஒரே நாடு, ஒரே சந்தை இருக்கும்போது.. ஒரே தடுப்பூசி விலை ஏன் இருக்கக் கூடாது? ப சிதம்பரம் கேள்வி
டெல்லி: ஏற்கனவே மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசுக்கு விற்பனை செய்யப்படும் அதே விலைக்கே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை அளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
அதன்படி வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவிலான மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி... பாஜக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் -காங்கிரஸ்
கொரோனா தடுப்பூசி கொள்முதல்
இதுமட்டுமின்றி மாநில அரசுகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, தடுப்பூசிகளை மாநிலங்களே தனியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளில் பாதியை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மீதி பாதியை வெளிச் சந்தையில் மாநிலங்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய விலை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாடு ஒரு தடுப்பூசி
இந்நிலையில், இன்று இது குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் கூறுகையில் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுக்கும் ஒரே விலையில் தடுப்பூசி விற்பனை செய்யப்பட வேண்டும் என்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மருந்து நிறுவனங்கள் லாபமடைந்து கொள்வதில் எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் மத்திய அரசு, அதன் பொறுப்பை இப்படிக் கைவிட்டுவிட முடியாது. ஒரு தேசம் ஒரு ரேஷன், ஒரு தேசம் ஒரு சந்தை போன்றவற்றை முன்னிறுத்தும் மத்திய அரசு. ஏன் ஒரு தேசம் ஒரு தடுப்பூசி விலை என்று கூறக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
சிதம்பரம் ட்வீட்
சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்திலும் இது குறித்து, குறைந்து வரும் ஜிஎஸ்டி வருவாய், குறைந்த அளவில் கிடைக்கும் வரிப் பகிர்வு, உதவித் தொகையைக் குறைத்தல் மற்றும் அதிகரித்த கடன் ஆகியவை காரணமாக ஏற்கனவே மாநில அரசுகள் சுமையில் உள்ளன. இதுமட்டுமின்றி, PM Caresஇன் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே போனது, எதில் செலவிடப்பட்டது என்பதும் யாருக்கும் தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் விமர்சனம்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், 18 முதல் 45 வயதானவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை. எவ்வித விலை கட்டுப்பாடுகளும் இல்லாமல் இடைத்தரகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பலவீனமான பிரிவினருக்குத் தடுப்பூசி கிடைக்குமா என்பதில் உத்தரவாதம் இல்லை. மத்திய அரசு தடுப்பூசிகளிலும் பாகுபாடு காட்டுகிறது. இது ஒன்றும் விநியோக திட்டம் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூன்று முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் என்பவை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் 100% பாதுகாக்காது என்றாலும், மூச்சுத் திணறல், தீவிரமான பாதிப்பு ஆகியவற்றைக் குறைத்து உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்துகின்றன.