ப.சிதம்பரத்தை இரவு தூங்க கூட விடவில்லை.. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை.. கபில் சிபல் அதிரடி வாதம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அப்போது சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த கால அவகாசம் கோரப்பட்டது.
இதன் பிறகு சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் இதுவரை எந்தவொரு விசாரணையிலும், சிதம்பரம் ஆஜராகாமல் தப்பித்துச் சென்றது கிடையாது. விசாரிக்கும் தேவை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரை அழைத்திருக்கலாம். ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். பிறகு எப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்ல முடியும்.
வழக்கில் 10 ஆண்டுகள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுவரை வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த எந்த ஒரு அதிகாரியும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவில்லை. இந்த வாரியத்தின் 6 அரசு செயலாளர்கள்தான் ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு முதலீடு செய்ய அனுமதி வழங்கினர்.
ஆனால், சிதம்பரம் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட, பிறருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்திற்கு சாதாரண ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தூங்குவதற்கு அனுமதி கேட்டபோது சிதம்பரத்திற்கு சிபிஐ அந்த அனுமதியை கூட வழங்கவில்லை. 12 கேள்விகளில் 6 கேள்விகளுக்கு ஏற்கனவே சிதம்பரம் பதில் அளித்து விட்டார். இப்போது, சிதம்பரத்திடம், கேட்ட கேள்வியையே வேண்டும் என்று மீண்டும் கேட்டனர். அவர் ஏற்கனவே இதற்கு பதில் அளித்துவிட்டார். வேண்டும் என்றே இப்படி அவரை தொந்தரவு செய்துள்ளனர். இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார்