வேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த பக்கம் சென்றாலும் சிக்கல் என்ற நிலைதான் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த பக்கம் சென்றாலும் சிக்கல் என்ற நிலைதான் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இத்தனை நாட்கள் இந்த வழக்கில் ஆமை வேகத்தில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேகம் காட்ட தொடங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க நேற்றே டெல்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. அப்போதில் இருந்தே ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயன்று வருகிறது.
என்ன மறுப்பு
ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்துவிட்டார். உங்கள் மனுவில் நிறைய தவறு இருக்கிறது. அதனால் உங்கள் மனுவை பதிவாளர் இன்றைய லிஸ்டில் வைக்கவில்லை . உங்கள் மனுவை சரி செய்து தாக்கல் செய்க. நாளை அதை விசாரிக்கலாம் என்று கூறிவிட்டார்.
எங்கு முறையீடு
இதனால் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிட ப. சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளது. தற்போது அயோத்தி வழக்கில் விசாரணையில் இருக்கும் தலைமை நீதிபதி 4 மணிக்கு ப. சிதம்பரம் கோரிக்கையை பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அங்கும் கூட ப. சிதம்பரத்திற்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது.
என்ன செக்
இந்த வழக்கு ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டாலும் கூட அரசு தரப்பு, ப. சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார். அவரை நேற்று மாலையில் இருந்து பார்க்க முடியவில்லை என்று வாதம் செய்யும். ஜாமீனுக்கு முன்பே தலைமறைவாகும் அவர் ஜாமீன் கிடைத்தால் ஒத்துழைக்கவே மாட்டார். அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று வாதம் செய்யும்.
கைது வாய்ப்பு
இந்த வாதத்தை தவிர்க்க, ப. சிதம்பரம் இன்று உச்ச நீதிமன்றம் வருவதற்கு முயற்சி செய்ய கூட வாய்ப்புள்ளது. ஆனால் அவர் உச்ச நீதிமன்றம் வந்தால் அதே இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய கூட வாய்ப்பு உள்ளது. அதனால் ப. சிதம்பரம் தலைமறைவாக இருந்தாலும் பிரச்சனை, இல்லையென்றாலும் பிரச்சனை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சிக்கல்
இதனால் இந்த வழக்கில் தற்போது ப. சிதம்பரம் கைதாகி சிறை செல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று கூறுகிறார்கள். ஆம் அவருக்கு இந்த ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. அவர் எப்படியும் நாளை மாலைக்குள் கைது செய்யப்பட்டுவிடுவார் என்று கூறுகிறார்கள்.