உண்மை சொன்ன பாதுகாப்புத்துறை...பிரதமர் ஏன் பொய் பேசுகிறார்...ராகுல் காந்தி கேள்வி!!
டெல்லி: ஏன் லடாக்கில் சீன ஊடுருவல் விஷயத்தில் பிரதமர் பொய் பேசுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன ராணுவம் பாங்காங் சோ, கோக்ரா ஆகிய பகுதிகளில் எல்லை மீறி இருப்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''ஹாட் ஸ்பிரிங் பகுதியில் ரோந்து எண் 15ல் இருக்கும் குராங் நலா மற்றும் கோங்ரா, பாங்காங் சோ ஆகிய பகுதிகளில் மே 17-18 ஆகிய தேதிகளில் சீன ராணுவம் எல்லை மீறியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எல்லை மீறல் குறித்து இதுவரை சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கடந்த மே மாதம் இதுகுறித்து பேசி இருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''சீன ராணுவம் முன்பு இருந்த இடத்தில் இருந்து சற்று முன்னோக்கி வந்துள்ளது. இதை இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது என்று தவறுதலாக கருதக் கூடாது'' என்று தெரிவித்து இருந்தார்.
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் மரணம் - பிரதமர் மோடி நிதி உதவி
இந்த நிலையில் பாதுகாப்புத்துறை இணையத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவம் ''மீறியுள்ளது'' என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப்பட்டு இருப்பது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை மேற்கோள் காட்டியும், டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியை மேற்கோள் காட்டியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டரில் இதை பதிவு செய்து, ''ஏன் பிரதமர் பொய் பேசுகிறார்? என்ற கேள்விக் குறியுடன் முடித்துள்ளார். தொடர்ந்து இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவி உள்ளது. இந்திய இதை மறுப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை இணையத்தில் இதுதொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.