அடடா... இதுதான் காரணமா.. கோவிஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி
டெல்லி: இன்று காலை பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்குப் பதிலாக கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் என மொத்தம் மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்பட்டது. மத்திய அரசே இதற்கான முழு செலவையும் ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட முக்கிய தலைவர்கள்
உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும்போது, அந்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களே முதலில் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கவே இப்படி முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர்.
காங்கிரஸ் விமர்சனம்
ஆனால், முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை. இதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர். மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கப் பிரதமர் மோடி, தானாக முன்வந்து தடுப்பூசி முதலில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாஜக பதிலடி
அதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, இதுவே காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்று இருந்தால் முதலில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பின் அவர்களின் நெருக்கமானவர்களுக்குமே தடுப்பூசி கிடைத்திருக்கும். அதன் பின்னரே பொதுமக்களுக்குத் தடுப்பூசியை வழங்கியிருப்பார்கள் என்றனர். மேலும், பாஜக ஆட்சியில் அனைத்தும் முறையாகவும் சட்டப்படியுமே நடக்கும் என்றும் விரைவில் பிரதமர் மோடி தடுப்பூசியை எடுத்துக்கொள்வார் என்றும் தெரிவித்தனர்.
இரண்டாம்கட்ட தடுப்பூசி பணிகள்
இந்தச் சூழ்நிலையில் தான், இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி 60 வயதைக் கடந்தவர் என்பதால் அவரும் விரைவில் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் மோடி
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை முதல் நாளே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் பிரதமர் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டேன் என கூலாக தனது பாணியில் எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார். இதில் முக்கிய தகவல் என்னவென்றால் நாட்டில் தற்போதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்குப் பதிலாக கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பது தான். இதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
Array
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதில் மூன்று கட்ட மருத்துவ சோதனைகளும் முடிந்துள்ளதால் கோவிஷீல்டு தடுப்பூசியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி தற்போது சோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது.
காரணம் என்ன
இப்படியிருக்கப் பிரதமர் ஏன் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார், காரணம் ஆத்மநிர்பார், அதான் தற்சார்பு இந்தியா தான். என்னதான் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்தாலும், அது ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. அதாவது ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பூசியே இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பாரத் பயோடெக்
ஆனால், கோவாக்சின் அப்படியல்ல... இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருந்து ஆய்வகத்தைப் பிரதமர் மோடி விசிட் செய்தது ஞாபகம் இருக்கிறதா? அதே பாரத் பயோடெக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க இந்த கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இந்திய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியையே பிரதமர் மோடி எடுத்துக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியே தற்போது கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளதால் அந்தத் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.