மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்யாதது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்திருக்கிறது. இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்யாமல் போனதும் அக்கட்சியினரை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
2014 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்களை விட வேறு எந்த ஒரு தேர்தலும் காங்கிரஸுக்கு நம்பிக்கையை தரவில்லை. 2019 லோக்சபா தேர்தல் காங்கிரஸுக்கு மிகப் பெரும் அடியைத் தந்தது.
நேரு குடுபத்தின் சொந்த தொகுதி என சொல்லப்பட்ட அமேதியில் ராகுல் காந்தி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? மழையை காரணம் கூறத் திட்டம்?
தலைவர் தேடல்
இத்தோல்வியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரத்தில் காங்கிரஸுக்கு புது ரத்தம் பாய்ச்சக் கூட ஒரு தலைவரை கண்டுபிடிக்காமல் அக்கட்சி தவியாய் தவித்தது.
இடைக்கால தலைவராக சோனியா
கடைசியில் வேறுவழியே இல்லாமல் இடைக்கால தலைவராக சோனியா காந்தியையே கொண்டுவந்தனர் அக்கட்சித் தலைவர்கள். தற்போது மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன.
அக்கப்போர்கள்
இத்தேர்தலுக்கான வியூகம் வகுப்பதிலும் சரி, வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் சரி அத்தனை அக்கப்போர்களையும் இரு மாநிலத்திலும் காங்கிரஸ் எதிர்கொண்டது. இந்த பஞ்சாயத்துகளைத் தீர்க்க காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கவும் இல்லை.
ராகுல் மட்டும் பிரசாரம்
இத்தேர்தலில் சோனியா காந்தி பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு ராகுல் காந்தி மட்டும் பிரசார கூட்டங்களில் தலையை காட்டிக் கொண்டு ஒதுங்கிவிட்டார். கடைசிவரை சோனியா காந்தி பிரசாரத்துக்கே வரவில்லை.
தோல்வியை தழுவும் காங்கிரஸ்
அதேபோல் பிரியங்கா காந்தியும் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் பக்கம் எட்டி கூடப் பார்க்கவில்லை, தற்போது இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியையே தழுவும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
ஹரியானா பரிதாபம்
அதுவும் ஹரியானாவில் சிங்கிள் டிஜிட் நிலைமைக்குத் தள்ளப்படும் பரிதாபத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ். இதற்கு காரணமே காங்கிரஸ் மேலிடம் உட்கட்சி பூசல்களை முடிவுக்குக் கொண்டு வர உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அக்கறையே காட்டவில்லை என்பதுதான்.
எதிர்பார்ப்பு தரும் பிரியங்கா
மேலும் பிரியங்கா காந்தி குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையும் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் வட்டாரங்கள், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உபியில் உயிர்பிப்பு
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க இருக்கும் ஒரே கடைசி ஆயுதம் பிரியங்கா காந்திதான். அவர் முடிந்த அளவு கட்சியை மறுசீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். பிரியங்காவாலும் காங்கிரஸை நிமிரவைக்க முடியாமல் போனால் அக்கட்சியின் எதிர்காலம் பெரும்கேள்விக்குறிதான் என பெருமூச்சுவிடுகின்றனர்.