வங்கி கடன் இஎம்ஐ சலுகையை நீட்டிக்க திட்டவட்டமாக மறுத்த ரிசர்வ் வங்கி... பின்னணி என்ன?
டெல்லி: கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட வங்கி கடனுக்கான மாதத்தவணை சலுகையை கூடுதலாக நீட்டிக்க முடியாது என ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதற்கான பின்னணியை இப்போது பார்ப்போம்.
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பொருளதார நெருக்கடிக்கு உள்ளானதால் ரிசர்வ் வங்கி, வங்கி கடன் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் இருந்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கியது.
ஆனால் 6 மாதத் தவணையை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதனால் இந்த சலுகையை பயன்படுத்திய பொதுமக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு நிறுவனத்தார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு அறிவிப்பு
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மாதத் தவணை, வீட்டுக்கடன், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாங்கிய ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான. 6 மாதத்துக்கான வட்டிக்கு வட்டியை ரத்து செய்வதாக அறிவித்தது.
நீட்டிக்க முடியாது
இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியும் நேற்று புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யும் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுகொள்கிறோம். ஆனால், வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பே இல்லை. கூடுதலாக புதிய சலுகை எதுவும் வழங்க இயலாது
பணப்புழக்கத்தில் சிக்கல்
ஏனெனில் அப்படி செய்தால் கடன் வாங்கியவர், வாங்குபவர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதித்துவிடும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த அபாயங்களை ஏற்படுத்தும். அத்துடன் தவணை தள்ளிவைப்பு போன்ற. நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும். இந்த சலுகைகளை வழங்கினால் வரும் காலத்தில் பணப்புழக்கத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
வட்டிக்கு வட்டி வசூல்
கடன் தொகையை திருப்பி செலுத்தும் அவகாசத்தை 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும். ஆனால், வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது. அவ்வாறு செய்வதால், அது வங்கி நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தாலும் தரைக்கு வரும் பட்சத்தில் கரை தட்டி தான் நின்று கொண்டிருக்க வேண்டும். எனவே வங்கி கடன் விவகாரத்தில் எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியது. இந்த வழக்கு வரும் 13ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.