தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா? சீனாவுக்கா?
Recommended Video
டெல்லி: தடையற்ற வர்த்தகத்துக்கான மண்டல பொருளாதார ஒப்பந்தத்தில் (RCEP) இந்தியா கையெழுத்திட கடைசி நேரத்தில் மறுத்திருப்பது, சீனாவுக்கான வெற்றி என்று மேம்போக்காக பார்க்கப் படலாம். ஆனால் இந்தியாவுக்கு இவ்வாறு செய்ய வலுவான காரணங்கள் உள்ளன. ஒரு வகையில் இந்தியா பதுங்குவது பாய்வதற்குத்தான்.
ஆசியான் நாடுகளை சிறந்த 10 நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து என மொத்தம் 16 நாடுகள் சேர்ந்து தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில் தடையற்ற வர்த்தகத்தை ஏற்பாடு செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்தான் ஆர்சிஇபி.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான கூட்டம் நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. அப்போது தீவிர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கடைசி நிமிடத்தில் இதில் இணையப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி!
ஜப்பான் விருப்பம்
இந்த அமைப்பில் சீனாவுக்கு கடும் போட்டி கொடுக்கக் கூடிய நாடுகளில் முக்கியமானது இந்தியா. எனவே, இந்தியா இந்த அமைப்புக்குள் இருக்க வேண்டும் என்று ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் மிகவும் விரும்பின. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடியின் நண்பராக அறியப்படுபவர். எனவே, அவர் இந்த விவகாரத்தில் மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசி இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டார். அப்படி இருந்தும்கூட மோடி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
சீனாவின் வெற்றியா?
இதன் மூலம் சீனாவுக்கு இந்தியாவை வைத்து செக் வைக்கலாம் என்று நினைத்த ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த முடிவால், இவ்வமைப்பில் சீனாவின் ஆதிக்கம் உருவாகும் என்பதால் மேம்போக்காக இது சீனாவின் வெற்றியாக பார்க்கப்படும். ஆனால், அந்த அமைப்பை தாண்டி யோசித்தால் இந்தியா நன்கு யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளது என்பது புலப்படும்.
சீனாவுக்கே ஆதாயம்
ஏனெனில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கூடிய பொருட்களை இந்திய சந்தைக்குள் அதிக அளவுக்கு கொண்டு வருவதற்கு அந்த நாட்டு அரசுக்கு வாய்ப்பு ஏற்படும். சீன பொருட்கள் மலிவானவை, அதன் விநியோக கட்டமைப்பு மிக அதிகம். எனவே, இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததன் காரணமாக இந்திய வணிகர்களுக்கு அது நன்மை பயக்கும். அதேநேரம் இது இந்தியாவுக்கான பாதி வெற்றிதான்.
தனித்தனியாக உறவு
கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதை, தவிர்த்துவிட்டு முக்கியமான நாடுகளுடன் தனித்தனியாக இரு தரப்பு ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமாக இந்திய பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியை அடுத்து, மத்திய அரசு துவங்க உள்ளது. அது இறுதிவடிவம் பெறும்போதுதான், நமக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம்.
இருதரப்பு ஒப்பந்தங்கள்
ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை இந்தியா தனக்கான சந்தையாக கருதுகிறது. எனவே, அந்த நாடுகள் உடன், இருதரப்பு ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு, வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் தாய்லாந்து மற்றும் தென்கொரியா கூட, இணைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் கூட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாக இந்திய பொருட்களை சந்தைப்படுத்த முடியும். அதே நேரம் இந்தியாவில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும் முடியும் என்ற வகையில் இந்தியா, இப்போது பதுங்கியிருப்பது பாய்வதற்காகத்தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.