தகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தகில் ரமணியை இடமாற்றம் செய்வது என மூன்று விஷயங்களின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தகில் ரமணி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். இந்த இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தகில் ரமணி கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரது கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து தமது பதவியை தகில் ரமணி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தகில் ரமணியை இடம் மாற்றம் செய்வது என 3 விஷயங்களின் அடிப்படையில் கொலிஜியம் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது தகில் ராமனி மிக குறைவான நேரங்களே பணியாற்றுகிறார்; 2-வது ஆளும் கட்சி பிரமுகர் ஒருவருக்கு மிக நெருக்கமானவராக செயல்படுகிறார்; மற்றொன்று முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமித்த ஒரு டிவிசன் பெஞ்ச்சை தன்னிச்சையாக கலைத்தது ஆகியவற்றின் அடிப்படையில்தான் தகில் ரமணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இந்திரா பானர்ஜி ஒரு டிவிசன் பெஞ்சை அமைத்தார். அந்த பெஞ்ச்தான், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்தது. ஆனால் தகில் ரமணி இந்த டிவிசன் பெஞ்ச்சை திடீரென கலைத்து உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.