ஷகீத் திவாஸ்.. மாவீரர்களை மனதில் ஏந்த ஒரு நாள்.. மறக்க முடியுமா பகத் சிங் தியாகத்தை?
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது உங்களில் பலரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 23 ஷஹீத் திவாஸ் (Shaheed Diwas) அல்லது சர்வோதயா தினம் என்று அழைக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா?
சுதந்திர போராட்டக்காரர்களான பகத்சிங், சுகதேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராஜ்குரு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இது அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அரசு மார்ச் 23ம் தேதியை, ஷஹீத் திவாஸ் என்று அறிவித்தது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி, 1931 மார்ச் 23, அன்று தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி ஜான் சாண்டர்ஸ் கொலைக்காக, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 3 சுதந்திர போராட்ட வீரர்களும், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
சைமன் கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த லாலா லஜ்பத் ராய் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான காவல்துறை லத்தி சார்ஜ் செய்தது. இதனால் கோபமுற்ற சுதந்திர வீரர்களான பகத்சிங் உள்ளிட்டோர், கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை கொல்ல திட்டமிட்டனர். ஆனால் தவறுதலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டார்.
2020, மார்ச் 23ம் தேதி 90வது ஷஹீத் திவாஸை அனுசரிக்க உள்ளோம். பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் குறித்த சில முக்கிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பஞ்சாப் சிங்கம் என்றும் அழைக்கப்படும் லாலா லஜபதி ராய், சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்தார். காயங்களிலிருந்து கடைசிவரை லாலா லஜபதி ராய் முழுமையாக குணமடையவில்லை, 1928 நவம்பர் 17ம் தேதி அன்று மரணமடைந்தார்.
லலா லஜபதி ராயின் மரணத்தை பகத்சிங் நேரில் பார்க்கவில்லைதான். ஆனால், அவர் உள்ளத்தில் கோபக் கனல் கொந்தளித்தது. பஞ்சாப் சிங்கத்தை கொன்றனரே என்று கடும் கோபம் கொண்டார். சிவரம் ராஜ்குரு, சுக்தேவ் தாப்பர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட பிற புரட்சியாளர்களின் உதவியுடன், லாலா லஜபதி ராய் மரணத்திற்கு பழிக்குப் பழிவாங்க அவர் வீரச் சபதம் செய்தார். லாலா லஜ்பத் ராய் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டைக் கொல்லும் திட்டத்தை அவர்கள் வகுத்தனர்.
ஆனால் தவறுதலாக, உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜான் பி சாண்டர்ஸ், ராஜ்குரு மற்றும் பகத் சிங் ஆகியோரால் கொல்லப்பட்டார். 1928 டிசம்பர் 17 அன்று, சாண்டர்ஸ் லாகூரில் உள்ள மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். பகத்சிங் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தப்பி ஓடும்போது அவர்களைத் தொடர முயன்ற இந்திய கான்ஸ்டபிள் சனன் சிங்கை சந்திரசேகர் ஆசாத் சுட்டுக் கொன்றார். பகத்தும் அவரது கூட்டாளிகளும் பல மாதங்களாக தலைமறைவாகினர்.
1929 ஏப்ரல் மாதத்தில், பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளியான பத்துகேஸ்வர் தத் ஆகியோர் வர்த்தக தகராறு சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்திற்குள் 2 குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு சிலர் காயமடைந்தனர். பகத் சிங் தாக்குதலில் இருந்து தப்பித்திருக்கலாம், ஆனால் அவரும் படுகேஷ்வரும் தப்பவில்லை. 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி ஓங்குக) என்று வீர முழக்கமிட்டு அங்கேயே நின்றனர். எனவே போலீசார் பகத்சிங்கை கைது செய்தனர்.
பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகிய மாவீரர்கள், மார்ச் 24 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பே, மார்ச் 23 அன்று இரவு 7:30 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாவீரர்கள் மரணித்த நாளைத்தான், இந்தியா, ஷஹீத் திவாஸ் என்று அனுசரித்து வருகிறது. தேசப்பற்றுக்காக ஒவ்வொரு மக்களும் சூளுரைக்க வேண்டிய நாள் இது.