புதிய ஆர்பிஐ கவர்னர் நியமனம்.. மாஸ் திட்டத்துடன் செயல்படும் பாஜக.. பலே பிளான்!
மத்திய பாஜக அரசு பல திட்டங்களை மனதில் வைத்துதான் ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸை நியமித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசு பல திட்டங்களை மனதில் வைத்துதான் ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸை நியமித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மத்திய அரசுடன் இருந்துவந்த மோதல் போக்கை அடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
பல கேள்விகள்
சக்திகாந்த தாஸ் நியமனம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. மத்திய அரசு பல திறமையான, தகுதியான நபர்கள் இருக்கும் போது இவரை தேர்வு செய்தது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மத்திய அரசு பல திட்டங்களை மனதில் வைத்துதான் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
கட்டுப்படுத்துமா
முன்னாள் ஆர்பிஐ கவர்னர்கள் உர்ஜித் பட்டேல் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர் மத்திய அரசின் சொல்படி நடக்கவில்லை. ஆர்பிஐ அமைப்பின் தனித்துவத்தை காக்க முயற்சித்தனர். அது அவர்களின் பதவிக்கு ஆபத்தாகியது. இந்த நிலையில் சக்திகாந்த தாஸ் நியமனம் மூலம் மத்திய அரசு எந்த தடங்கலும் இல்லாமல் ஆர்பிஐ அமைப்பை கட்டுப்படுத்த போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வேறு எதுவும்
அதேபோல் பணமதிப்பிழப்பு நீக்கம் கொண்டு வந்த போது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர்தான் சக்திகாந்த தாஸ். அதனால் அவரை வைத்து மீண்டும் பணமதிப்பிழப்பு நீக்கம் போல எதாவது செய்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதார மாற்றத்திற்கான நல்ல நடவடிக்கை என்று கூறி பணமதிப்பிழப்பு நீக்கம் போல வேறு எதாவது பெரிய நடவடிக்கை எடுத்துவிட கூடாது என்று மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆர்பிஐ பணம்
ஏற்கனவே மத்திய அரசு ஆர்பிஐயிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க இருந்தது. நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அரசுக்கு உதவ ஆர்பிஐ வைத்திருக்கும் தொகையான 9.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 கோடி ரூபாய் மத்திய அரசு கேட்க இருந்தது. ஆனால் உர்ஜித் பட்டேலின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு இந்த பணத்தை வாங்க முடியவில்லை. சக்திகாந்த தாஸ் நியமனத்திற்கு பின் மத்திய அரசு அந்த பணத்தை வாங்க வாய்ப்புள்ளது.
பெரிய திட்டம்
பாஜக இந்த பணத்தை தனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தும் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. 3.6 கோடி ரூபாயை 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனது செலவிற்காக, இந்த ஆர்பிஐ பணத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று பலர் குற்றச்சாட்டு வைத்து இருந்தனர். அப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு புதிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அனுமதி அளிப்பாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.