ஆதரவு இல்லாத தலைவர்கள்.. அவர்களிடம் கொடுத்தால் கட்சி பிளவுபடும்.. சோனியாவை வழிக்கு கொண்டு வந்த காங்.
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகியவுடனேயே சோனியாவை சந்தித்து அப்பதவியை ஏற்க அழைத்தபோது மறுத்துவிட்ட சோனியாவை தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புக் கொள்ள வைத்தது எப்படி?
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி தேர்தல் தோல்விக்காக அப்பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா காரிய கமிட்டி ஏற்க முடியாது என சொல்லியபோது கடுங்கோபம் கொண்ட ராகுல், விடாப்பிடியாக பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தாய் இல்லாத குழந்தை போல வழிநடத்த தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி சிக்கித் தவித்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சோனியா வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட இனியும் தாமதப்படுத்தாமல் தலைவரை தேர்வு செய்யும் வழியை பாருங்கள் என தெரிவித்திருந்தார்.
காரிய கமிட்டி கூட்டம்
இதன்பின்னர் நேற்று காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எனினும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து இரவு மீண்டும் காரிய கமிட்டி கூட்ட்ம நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியையே தேர்வு செய்தனர்.
சோனியா காந்தி
நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக இனி தேர்வாகக் கூடாது என ராகுல் காந்தி சொல்லியிருந்தார். ஏற்கெனவே தலைவராக இருந்தவர்கள் புதிய தலைவருக்கான தேர்வு நடைமுறையில் அங்கம் வகிக்கக் கூடாது என்பதால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் சோனியா காந்தி வீடு திரும்பினார்.
அழைப்பு
இத்தனைக்கு பிறகும் சோனியா தேர்வானது எப்படி என்றும் அதற்கு அவர் எப்படி ஒப்புக் கொண்டார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தகலவறிந்த வட்டாரங்கள் கூறுகையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தவுடன், கடந்த மே மாதம் மூத்த தலைவரான அகமது படேலும் சில தலைவர்களும் தலைமையை ஏற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஒரு சதவீதம் பேர் ஆதரவு
ஆனால் அவர்களது அழைப்பை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் முகுல் வாஸ்னிக், ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர்கள் ரேஸில் இருந்தது. ஆனால் இவர்களை தலைவராக ஏற்க ஒரு சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்தனர்.
வளர்ச்சி பாதை
இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மூத்த தலைவர்கள் சோனியாவை அணுகி கட்சி தலைமையை ஏற்க அழைத்தனர். அப்போது அவர் மறுத்தார். இதையடுத்து நீங்கள் மறுத்தால் கட்சி நிச்சயம் பிளவுப்படும். எனவே பொறுப்பேற்றுக் கொண்டு மீண்டும் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள் என கேட்டுக் கொண்டனர்.
தலைவர்
எனவே நேரு குடும்பத்தை சேராதவர்களை தலைவராக்கினால் கட்சி பிளவுப்படும் என்ற கவலையடைந்த சோனியா ஒருவழியாக தலைவராக ஒப்புக் கொண்டார். இதுதான் நடந்தது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.