அதிகாரமே கிடையாது.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்.. ஸ்டெர்லைட் தீர்ப்பின் விவரம்
Recommended Video
டெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது ஏன் என்பது குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் சர்மா நிருபர்களிடம் விளக்கமளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை, ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து, தமிழக அரசின் உத்தரவு செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் சர்மா. அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அதை தள்ளுபடி செய்தது செல்லுபடியாகாது என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியுள்ளது.
அரசியலமைப்பு
தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி அரசாணை பிறப்பித்தது செல்லுபடியாகும். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பின் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும். எனவே உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவற்றில் மட்டும்தான் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியுமே தவிர, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிரான உத்தரவை விசாரிக்க முடியாது. எனவே தமிழக அரசு அல்லது, வேதாந்தா குழுமம் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தைதான், அணுக வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வெற்றி பெற்றுள்ளன
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை நிலை பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் இன்று வெற்றி பெற்றுள்ளன.
மதுரை ஹைகோர்ட் கிளை
தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர வேண்டுமானால், உயர்நீதிமன்றத்தை மட்டும்தான் அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதி தமிழக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்ற வரம்புக்குள் வருவதால், அங்கு தான் வழக்கு தொடர வேண்டி வரும். இவ்வாறு ராகேஷ் சர்மா தெரிவித்தார்.