அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏன்? ஆவணங்கள், ஆதாரங்கள் இதோ
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், இந்து தரப்புக்கு சொந்தமானது என்று தலைமை நீதிபபதி தலைமையிலான உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில், எதற்காக அந்த நிலம் முழுக்க இந்து தரப்புக்கு வழங்கபடுகிறது என்பது தொடர்பாக விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஆதாரங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்தும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பிலுள்ள அம்சங்களையும், முன்னதாக வழக்கறிஞர்கள் வைத்த முக்கிய வாதங்களில் சிலவற்றையும் பார்க்கலாம்:
உரிமையை நிரூபிக்கவில்லை
தீர்ப்பிலுள்ள சில அம்சங்கள் இவைதான்: 1528 ஆம் ஆண்டில் மசூதி கட்டப்பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகும் முஸ்லிம் தரப்பினரால் அந்த இடத்திற்கான உரிமையைப் ஆவணங்களோடு பதிவு செய்ய முடியவில்லை, அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் அந்த மசூதியில் தொழுகை நடத்திய ஆதாரத்தையும் அளிக்க முடியவில்லை.
வழிபாடுகள்
தந்தை ஜோசப் டிஃபென்டாலர் மற்றும் மாண்ட்கோமெரி மார்ட்டின் ஆகியோரால் எழுதப்பட்ட பயணக் குறிப்புகள், இந்துக்களின் நம்பிக்கை பற்றிய விரிவான விவரங்களை அளித்தன, அவை ராமர் பிறந்த இடம் மற்றும் ஜென்மஸ்தானத்தில், இந்துக்களால் நடத்தப்பட்ட வழிபாடு பற்றி விரிவாக தெரிவிக்கின்றன.
அயோத்தி முடிந்தது.. உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் இன்னும் 4 முக்கிய தீர்ப்புகள்
தொல்லியல் ஆய்வு
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) அறிக்கை "12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு கட்டமைப்பு" மசூதியின் கீழே இருப்பதை குறிக்கிறது மற்றும் அதன் கண்டுபிடிப்புகளில் "அந்த அமைப்பு" இந்துக்களின் வழிபாட்டு தலம் என்பதைக் குறிக்கிறது.
வழிபாடு தொடர்ந்தது
இந்து தரப்பினர், பல்வேறு வாய்வழி சாட்சியங்கள் மற்றும் பயணிகளின் கருத்துக்கள் வடிவில், மசூதி இருந்தபோதும் கூட சர்ச்சைக்குரிய இடத்தின் உள் மற்றும் வெளி முற்றத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியபடியேதான் இருந்தனர் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை வழங்கியிருந்தன. "இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் ஒரு இடத்தில், இஸ்லாமிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் கூட, இந்துக்கள் அங்கே வழிபடுவதை நிறுத்தவில்லை." அங்கே ராமர் பிறந்த இடம் இருப்பதை அவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து நம்பியபடிதான் இருந்துள்ளனர்.
தொழுகை நடக்கவில்லை
1528 ஆம் ஆண்டில் பாபரின் உத்தரவின் பேரில் அல்லது அவரால், மசூதி கட்டப்பட்டது. கட்டுமான தேதி மற்றும் 1856-67 க்கு இடையில் மசூதியில் தொழுகை நடைபெற்றது தொடர்பாக சன்னி வக்ஃப் வாரியம் ஆதாரம் தரவில்லை. மசூதி கட்டப்பட்ட நாளிலிருந்து பிரிட்டிஷாரால் செங்கல் சுவர் அமைக்கும் வரை, இடைப்பட்ட 325 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்ச்சைக்குரிய தளத்தின் மீது உடைமை கட்டுப்பாட்டை வைத்திருந்த ஆதாரங்களை முஸ்லிம் தரப்பு வழங்கவில்லை. இந்த காலகட்டத்தில் மசூதியில் நமாஸ் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
வெளிநாட்டு பயணிகள்
"1743 மற்றும் 1785 க்கு இடையில் இந்தியாவுக்கு வருகை தந்த வில்லியம் பிஞ்ச் (1608-1611) மற்றும் டிஃபென்டாலர் ஆகியோர் அயோத்தியைப் பற்றிய ஒரு விவரம் வழங்கியுள்ளனர். இரண்டு பேரின் விவர குறிப்பிலும் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால், குறிப்பிட்ட இடத்தில், ராமரை போற்றி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதுதான். ராமரை அங்கே இந்துக்கள் வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறிப்புகள் மதிப்புமிக்கது. டிஃபென்டாலர் குறிப்புபடி, தரையில் இருந்து ஐந்து அங்குலங்களுக்கு மேல் சுண்ணாம்புகளால் ஆன சதுர பெட்டி இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில், வாழ்ந்த, இந்துக்கள் இதை குழந்தை ராமரின், தொட்டில் என்று அழைத்தனர். விஷ்ணு பகவான் ராமர் அவதாரமாக பிறந்த வீட்டின் தளம் இது என்று அவர் தனது குறிப்பில் சொல்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த் பகுதி, அவுரங்கசீப்பாலோ அல்லது (மற்றவர்களின் கூற்றுப்படி) பாபராலோ இடிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
மசூதியின் கீழே உள்ள கட்டிடம்
தொல்லியல் குழுவின் முக்கிய கண்டுபிடிப்புகளை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, அவற்றில் சில: (i) மசூதியின் கீழே உள்ள அமைப்பு 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது, (ii) மசூதியின் அஸ்திவாரங்களின் கீழேயுள்ள கட்டிடத்தின், கட்டடக்கலை அம்சங்கள் இந்து மத கட்டிடக் கலை தோற்றத்தை பிரதிபலிக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு மசூதி இருந்த போதிலும், ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் இடத்தில் இந்து வழிபாடு தடை செய்யப்படவில்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரு இடத்தில், இஸ்லாமிய கட்டமைப்பின் இருப்பு, இந்துக்களை எந்த வகையிலும் தங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுக்க செய்துவிட முடியவில்லை. இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஸ்கந்த புராணம்
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, இந்துக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான, மஹந்த் ராம் சந்திர தாஸ், வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகளில் ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்கந்த புராணத்தில், அயோத்தியா மஹாத்மியத்தி உள்ளது. இதில், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அரசிதழ்கள்
அரசாங்கள் வெளியிட்ட அரசிதழ்களின் பல இடங்களில் ராமர் பிறந்த இடத்தில்தான் 1528ம் ஆண்டு, பாமர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்து தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இதை மறுப்பதற்கு போதுமான ஆதாரம் எதிர்தரப்பால், முன்வைக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தற்போது தெரிவித்துள்ளனர்.
குருநானக் வழிபாடு
சீக்கிய மதம் குறித்து ஆய்வு மேற்கொள்பவர் ரஜிந்தர் சிங். அவர் அளித்த சாட்சியில், சீக்கிய மத குருவான, குருநானக், 1510ம் ஆண்டு அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக சாட்சியம் தெரிவித்தார். இதை வழக்கின் வாதத்தின்போது இந்து தரப்பு வக்கீல்கள் குறிப்பிட்டனர். ஆக மொத்தம், வெளிநாட்டு யாத்ரீகர்கள் அந்த காலகட்டத்தில் எழுதிய குறிப்புகள், இந்து மத நூல்கள், குருநானக் வாழ்க்கை மற்றும், அகழாய்வு ஆகிய அனைத்துமே, அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில் இந்துக்கள், குழந்தை வடிவில் ராமரை வணங்கியதை உறுதி செய்துள்ளன. ஆனால் சன்னி வக்ஃப் வாரியம் தரப்பில் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதே தீர்ப்பின் சாராம்சமாகும்.