அந்த சம்பவம்.. உள்ளே வந்த அமித் ஷா மகன்.. அரசியலாக்கப்படும் தோனியின் திடீர் ஓய்வு.. உண்மை என்ன?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவித்ததை தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள் , நெட்டிசன்கள் சிலர் அரசியலாக்கி வருகிறார்கள்.
டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவித்ததை தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள், நெட்டிசன்கள் சிலர் அரசியலாக்கி வருகிறார்கள். இதற்கு பின் பெரிய அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகவும் புகார்களை வைத்து வருகிறார்கள்.
ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணி தயாராகி வரும் நிலையில் திடீர் என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.
ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார்.
தோனி ஓய்வு.. அதென்ன ராஞ்சிக்கு மட்டும்.. இந்தியாவுக்கே தரலாமே.. நெட்டிசனுக்கு ஜொமாட்டோ கிண்டல் பதில்
நெட்டிசன்கள் வேலை
ஒரு சாதாரண செய்தியை அரசியல் ஆக்குவதே நெட்டிசன்களின் வேலை. அதிலும் விஜய், அஜித், தோனி போன்ற அதிக ரசிகர் பலம் கொண்டு ஒருவர் குறித்து அரசியல் ரீதியாக அடிக்கடி விமர்சனங்கள், கருத்துக்கள் வைக்கப்படுவது வழக்கம். இவர்கள் எல்லாம் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வதந்திகளும் வெளியாவது வழக்கமாகிவிட்டது.
அரசியல் பரபரப்பு
இப்படி இருக்க தோனியின் ஓய்வும் அதற்கு முன் நடந்த சில சம்பவங்களும் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தால்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்று ஆதாரமே இல்லாத புகார்களை சில நெட்டிசன்கள் வைத்து வருகிறார்கள். சில சந்தேக புள்ளிகளை இணைத்து இந்த குற்றச்சாட்டை அவர்கள் வைத்து உள்ளனர்.
என்ன சந்தேகம்
முதல் சந்தேகம் என்று பார்த்தால், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் அப்போதைய தேசிய தலைவர் அமித் ஷாவை தோனி சந்தித்தார். அமித் ஷா அப்போது வரிசையாக பிரபலங்களை சந்தித்து வந்தார். தேர்தல் நேரத்தில் பிரபலங்களை சந்தித்து ஆதரவை பெற்றால், அவர்களின் ரசிகர்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற திட்டத்தில் இவர் சந்தித்து வந்தார்.
அமித் ஷா எப்படி
இதில் அமித் ஷா தோனியையும் சந்தித்தார். ஆனால் தோனி பாஜகவிற்கு வெளிப்படையாக ஆதரவு எதுவும் அளிக்கவில்லை. இந்த பிரச்சனை அப்போதே முடிந்துவிட்டது. ஆனால் இதன் காரணமாகவே தோனி அரசியல் ரீதியாக பழி வாங்கப்படுகிறார் என்று ஆதரமே இல்லாமல் சில குற்றச்சாட்டுகளை இணையத்தில் நெட்டிசன்கள், பிரபல கிரிக்கெட் விமர்சகர்கள் வைத்து வருகிறார்கள்.
ஜெய் ஷா எப்படி
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , ஜெய் ஷா. அமித் ஷாவின் மகனான இவர் பிசிசிஐ உள்ளே வந்த பின்தான் தோனிக்கு மரியாதை குறைந்தது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதுவரை தோனி சொல்வதே பிசிசிஐ அமைப்பில் வேத வாக்காக இருந்தது. ஆனால் ஜெய் ஷா உள்ளே வந்த பின் நிலைமை மாறியது. தோனிக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கு பின் அவர் ஓரங்கட்டப்பட்டார்.
நீக்கம் ஏன்?
அதோடு தோனிக்கு செய்யப்பட்டு இருந்த ஒப்பந்தமும் நீக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தோனியின் ஏ+ ஒப்பந்தம் நீக்கப்பட்டது. ஏ+ ஒப்பந்தம் என்பது டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்றிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த ஒப்பந்தம் நீக்கப்பட்டு, வருமானம் குறைக்கப்பட்டது. இது சாதாரண நிர்வாக நடவடிக்கை. ஆனால் இதற்கும் கூட ஜெய் ஷாதான் காரணம் என்று வதந்திகள் பரவியது.
கம்பீர் எப்படி
இதெல்லாம் போக ஜெய் ஷா, பாஜக எம்பி கம்பீரை வைத்து தோனியை நெருக்குகிறார் என்றும் செய்திகள் வந்தது. தோனி ஓய்வு பெற வேண்டும் என்று கம்பீர் தொடர்ந்து நெருக்கி வந்தார். இதற்கும் கூட அமித் ஷா கொடுத்த அழுத்தமே காரணம் என்று புகார்கள் இணையத்தில் எழுந்தது. ஆனால் இதற்கு எதற்கும் சரியான ஆதாரங்கள் வெளியாகவில்லை.
என்ன முறைகேடு
இதெல்லாம் போக கடந்த சில வாரங்கள் முன் தோனிக்கு எதிரான அம்ரபலி முறைகேடு புகாரின் விசாரணையும் தொடங்கியது. அம்ரபலி குரூப்ஸ் நிறுவனம் தற்போது ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கி இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் இதனால் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்ஷிதான் இயக்குனர். இதனால் இந்த முறைகேட்டில் தோனிக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதை பாஜக கையில் எடுத்தது தோனியை நெருக்கவே என்றும் கூறுகிறார்கள்.
ஏன் அழுத்தம்
இப்படி முறைகேடு புகார் தொடங்கி ஓய்வு அழுத்தம் என்று பல வகையில் தோனிக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பாஜக தரப்பு எதுவும் சொல்லவில்லை. மாறாக தோனியை பாஜக பாராட்டவே செய்கிறது. அமித் ஷாவே தோனியை உச்சி முகர்ந்து புகழ்ந்தார். உங்களின் ஹெலிகாப்டர் ஷாட்டை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்யும் என்று அமித் ஷாவும் போஸ்ட் செய்தார். ஜெய் ஷாவும் உருக்கமாக விடை கொடுத்தார்.
Recommended Video
எப்படி இருவரும்
தோனியும் அஜித்தும் பொது வாழ்க்கையில் கொஞ்சம் ஒரே குணம் கொண்டவர்கள். இருவருக்கும் அரசியல் ஆகாது. அதோடு இருவரும் கிரிக்கெட் சினிமா இல்லையென்றால், நேரடியாக குடும்பம். மகள், வீடு, மனைவி, பைக், ஹெலிகாப்டர் என்று இவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை அரசியலுக்கு இழுப்பது முழுக்க முழக்க தவறானது!