உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலை என் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டே நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 வருடங்களாக நடத்தப்படாமலேயே வந்தது. அதனால் எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. ஆனால் இந்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படாமலேயே இருந்தது.
அரசு தரப்பு வாதங்கள்
அதனால், இது தொடர்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம், மற்றும் தமிழக அரசு தரப்பின் வாதங்கள் கேட்கப்பட்டன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான போதுமான கால அவகாசத்தையும் நீதிபதிகள் அளித்திருந்தனர்.
வழக்கறிஞர் மனு
இதனிடையே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஏன் நடத்தவில்லை
அப்போது நீதிபதிகள்,அப்போது நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று கேட்டனர். தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பதிலளிக்க வேண்டும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது என்று கூறிய நீதிபதிகள், இன்னும் 4 வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.