100 வயசு.. முப்படைகளிலும் அசத்தல்.. சாதனை வீரர்.. நாடே கொண்டாடுது.. யார் இவர்?
டெல்லி: இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை என முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரியான கலோனல் பிரீத்திபால் சிங் கில் தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிசம்பர் 11, 1920-ஆம் ஆண்டு பாட்டியாலாவில் பிறந்தவர் பிரீத்திபால் சிங் கில். இவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்தார். அவர் 1942ஆம் ஆண்டு விமான படையில் இணைந்தார். இதையடுத்து அவர் விமானி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் இந்திய கடற்படையில் சேர்ந்தார். மிகப் பெரிய கடல் எல்லைகளில் எல்லாம் பணியாற்றினார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் கன்னர் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
பிறந்தநாள்
மணிப்பூரில் அஸ்ஸாம் ரைபிள்ஸில் செக்டர் கமான்டராக ஓய்வு பெற்றார். முப்படைகளிலும் பணியாற்றிய இவரது 100ஆவது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவரது சேவையை அறிந்த பலர் சமூக வலைதளங்களில் சிங்கை கொண்டாடி வருகிறார்கள்.
பஞ்சாப் முதல்வர் ட்வீட்
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பிரீத்திபால் சிங்கிற்கு வாழ்த்துகள். முப்படைகளிலும் பணியாற்றி தனி அடையாளத்தை கொண்டுள்ளார். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என அமரீந்தர் தெரிவித்துள்ளார்.
விமான அதிகாரி
கராச்சியில் விமானி அதிகாரியாக பணியாற்றிய சிங், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது தந்தை கட்டாயப்படுத்தியதால் விமான படையிலிருந்து வெளியேறினார். சிங் மைன் ஸ்வீப்பிங் கப்பல் மற்றும் ஐஎன்ஸ் டீர் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். ஐஎன்எஸ் டீர் கப்பலானது 1986-ஆம் ஆண்டு முதல் முதலில் படையினர் பயிற்சி பெறுவதற்காக கட்டமைக்கப்பட்டது. இந்த கப்பலில் 293 பேர் பயணம் செய்யலாம்.
கடற்படை
இரண்டாம் உலக போரின் போது சரக்கு கப்பல்களுக்கான பாதுகாப்பு படையில் கடற்படை சார்பில் இடம்பெற்றிருந்தார். அது போல் 1965-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இவர் தனது சேவையை ஆற்றியுள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் என அனைத்து இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.
அர்ஜான் சிங்
சிங் கில்லின் தந்தை ஹார்பால் சிங்கும் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். தன்னால் இந்திய விமான படையின் மார்ஷலாக பணியமர்த்தப்பட்ட அப் படையின் முக்கியத்துவம் வாய்ந்த அர்ஜான் சிங்கிற்கு தனது மகன் பிரீத்தி சிங்கை அறிமுகப்படுத்தினார்.