"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல "ப்ரோ"!
டெல்லி: பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா- அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு, கேந்திர பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவை இந்தியா-அமெரிக்கா உறவில் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் ஏ! அமெரிக்க ஏகாதிபத்தியமே! என்கிற கம்யூனிசப் பேச்சுகள் குறைந்துபோய்விட்டன. ஒருகாலத்தில் படித்த மேல்தட்டு வர்க்கத்தினர் அமெரிக்கா எதிர்ப்பு அரசியலை பேசுவதை ஒரு ஸ்டைலாக கருதினர். ஆனால் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின்னர் அத்தனையும் தலைகீழாகிப் போனது.
அமெரிக்காவின் அத்தனை நகரங்களிலும் இப்போது இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இந்தியர்களின் வாழ்க்கையில் அமெரிக்கா பிரதான இடமாகவும் உருமாறிவிட்டது. ஒருகாலத்தில் இந்திய கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு செல்வது பெருமிதமானதாக இருந்தது. ஆனால் இப்போது சந்தைக்குப் போவதைப் போல அமெரிக்காவுக்கே சென்றுவிட்டு திரும்புகிற இந்தியர்களையும் பார்க்க முடிகிறது.
இந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
இந்திராவும் அமெரிக்காவும்
அமெரிக்காவின் அரசியலிலும் அங்குவாழும் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தும் நிலை இருநாடுகளிடையே உறவு மேம்பட்டிருக்கிறது. 1980களின் தொடக்கத்தில் இலங்கையில் கால்பதிக்க முயன்றது அமெரிக்கா. ஆனால் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராவோ, இந்தியாவின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் இலங்கை அனுமதி தரக்கூடாது என சீறினார். அவருக்குப் பின்னர் ராஜீவ்காந்தி உருவாக்கிய இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தத்திலும் கூட இந்த சரத்து இடம்பெற்றது.
அமெரிக்காவின் நட்பு தேசம்
ஆனால் காலம் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக இந்தியா உருமாறி நிற்கிறது. பனிப்போர் காலத்தில் அணிசேரா கொள்கைகளைப் பேசிய அதே இந்தியாதான் இப்போது அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. அதற்காக அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுகிற நாடாகவும் இந்தியா டயரைத் தொட்டுவிடவும் இல்லை. நமது தேசத்துக்கு பேரெதிரியாக சீனாதான் இருக்கிறது. சீனாவை எதிர்க்க நமது சர்வதேச அரங்கில் அரவணைப்பு தேவை. பசிபிக் பிராந்திய, தென்னாசிய விவகாரங்களில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அரவணைப்பு தேவை.
நேரு-கென்னடி-ஜக்குலின்
இப்படியான பரஸ்பர புரிதல்களில்தான் இந்தியா- அமெரிக்கா உறவுகள் ஆழமாக விரிவடைந்திருக்கிறது. 1945-ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் அதிபர்களாக இருந்தவர்களில் ஜார்ஜ் புஷ்தான் இந்தியாவுக்கு மிக மிக ஆதரவாக இருந்தார்; ரூஸ்வெல்ட்டும் ரீகனும் எடுத்த நிலைப்பாடுகள் வேறானவை என்கின்றன சில புள்ளி விவரங்கள். ஆம் 1960களில் சீனாவுடனான யுத்த காலத்தில் அமெரிக்கா நமக்கு ஆதரவுக் கரம் நீட்டியது; அப்போதைய அதிபர் கென்னடி எப்படி எல்லாம் இந்தியாவுக்கு உதவியாக இருந்தார் என்கிற வரலாறு இப்போது ஆவணங்களாக இருக்கின்றன. நேருவின் வரலாற்றில் எப்போதும் பேசுபொருட்களில் ஒன்றான இருக்கும் ஜக்குலின் கென்னடி அந்த காலத்தில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
ஊசலாட்டமான உறவுகள்
ஆனால் 1970களில் இந்தியா அமெரிக்கா உறவில் சற்றே விரிசல் இருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டியது. அப்போது அதிபராக இருந்தவர் நிக்சன். 1980களில் கூட இந்தியா அமெரிக்காவுடன் அப்படி ஒன்றும் நெருங்கிவிடவில்லை என்பதைத்தான் இலங்கையில் அமெரிக்கா கால் பதிக்க முயன்றதை இந்திரா ஆக்ரோசமாக எதிர்த்த வரலாறு சொல்கிறது. 1990களில் கூட கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா நெருக்கடிகளை எதிர்கொள்ளவே செய்தது. அணுசக்தி விவகாரம், காஷ்மீர் விவகாரம் அத்தனையும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. 1998-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்குப் பிந்தைய காலத்தை இருநாடுகளிடையேயான உறவில் முக்கியமான காலமாக குறிப்பிடுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தலைகீழான காலங்கள்
இந்தியாவின் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்குள் வர தடை இருந்தது. ஆனால் அதே பிரதமர் மோடிக்குத்தான் அதே அமெரிக்கா செங்கள வரவேற்பு கொடுத்த வரலாறும் இப்போது திரும்பி இருக்கிறது. எந்த அமெரிக்கா, கடந்த காலங்களில் பாகிஸ்தானின் முதுகுக்கு பின்னால் ஒளிந்திருந்ததோ அதே அமெரிக்கா இப்போது காஷ்மீர் பிரச்சனையில் இந்திய தேசத்தின் பக்கம் நாங்கள் என்கிறது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்தியர்கள் வாக்கு முக்கியம் என்பதற்காக அங்கே வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை என்பது விவாதங்களில் முக்கிய அம்சமாக இருக்கிறது.
அமெரிக்கா ஏன் முக்கியம்?
என்னதான் இருந்தாலும் உலகின் பெரியண்ணனாகிய அமெரிக்கா தேவைக்கு ஏற்பவே தேசங்களை பயன்படுத்திக் கொள்ளும். இதுதான் இந்தியா விவகாரத்தில் கடந்த காலத்திலும் நடந்தது. நிகழ்காலத்திலும் நடக்கிறது. இருப்பினும் இப்போது எல்லையில் சீனா, பாகிஸ்தான் எதிரிகள் இலவு காத்த கிளிகளாக நிற்கின்றன. அண்டை நாடுகள் அத்தனையிலும் சீனா அகலக் கால் விரித்து வைத்துள்ளது. அந்த சட்டாம்பிள்ளைக்கு கடிவாளம் போட நமக்கு ஒரு இறுகப் பற்றிக் கொண்டு அடுத்த அடி வைக்க ஒரு கூடுதல் தேவை. அந்த அடிப்படையில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நமக்கும் மிக முக்கியமானதே.