போலீசிடம் இருந்து தப்பிக்க நினைச்ச ரவுடி விகாஸ் துபே நேற்று ஏன் சரண்டராகனும்? கேட்கிறது காங்.
டெல்லி: போலீசாரிடம் இருந்து தப்பி ஓட ரவுடி விகாஸ் துபே நினைத்திருந்தால் நேற்று ஏன் சரணடைய முன்வந்தார்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே இன்று கான்பூர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இந்த என்கவுண்ட்டர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
60 கேஸ்களை சுமந்து நின்ற துபேவை என்கவுண்டர் செய்தது சரியா?.. இதுவரை காத்தவர்களுக்கு என்ன தண்டனை?
கார்கள் நிறுத்தம்
கான்பூருக்குள் விகாஸ் துபே வந்த காரை பத்திரிகையாளர்கள் பின் தொடர்ந்தே வந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் திடீரென பத்திரிகையாளர்கள் வாகனம் மட்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிதுநேரத்திலேயே எனகவுண்ட்டர் அரங்கேறி அதற்கான திரைக்கதையை போலீசார் ஒப்பித்தனர். கடைசியாக என்கவுண்ட்டரில் விகாஸ் துபே மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
விகாஸ் துபே கார் மாற்றம்
அதேபோல் விகாஸ் துபேவை அழைத்துச் செல்லும் கார் குறித்தும் சர்ச்சை எழுந்திருக்கிறது. சுங்க சாவடி கேமராவில் விகாஸ் துபே அமர்ந்திருக்கும் காரும் கவிழ்ந்ததாக சொல்லப்பட்ட காரும் வெவ்வேறானவை. போலீசார் திட்டமிட்டே என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதையே இது காட்டுகிறது என்றும் குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்படுகிறது.
சரண்டர்- தப்பி ஓட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவோ, விகாஸ் துபே போலீஸ் பிடியில் இருந்து தப்பியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்தவர் நேற்று ஏன் மத்திய பிரதேசத்தில் போலீசாரிடம் சரணடைய முன் வந்தார்? இன்று தப்பிக்க நினைத்தவர் நேற்று ஏன் சரணடைந்தார்? என கிடுக்குப்பிடி கேள்வி கேட்கிறார்.
மாயாவதி கேள்வி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியோ, விகாஸ் துபே என்கவுண்ட்டர் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளியே வரும் என வலியுறுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த என்கவுண்ட்டர் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.